Saturday, October 14, 2017

life style -சுமார் 100 வருடங்களுக்கு முன்பு......

life style -சுமார் 100 வருடங்களுக்கு முன்பு......

அவள் பள்ளிக்குச் சென்றதில்லை. திருமணம் என்றால் என்ன என்று புரியாத விளையாட்டுப்பருவத்திலேயே திருமணமாகிவிட்டது. அதனால்  ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை அவளுக்கு. ஐந்திலிருந்து ஏழு வயதிற்குள் அவள் ஒரு மனைவி. அவள் கணவன் என்கிற பையனுக்கு 10 அல்லது 11 வயது. இருவருமே சேர்ந்து பாண்டி பல்லாங்குழி விளையாடுவது வழக்கம்.

ஒருநாள் அவளை அவள் புருஷன் வீட்டில் கொண்டு விட்டார்கள். நிறைய வேலை செய்ய பழக்கப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு டஜன் ஆசாமிகளாவது இருப்பார்கள். ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். வேலை என்றால் ஏதோ கம்பனி, ஆபிஸ் என்று கனவு காண வேண்டாம். வயல் தான். காலை உணவு, மதியம் வாழை இலையில் சாப்பாடு. மாலை எதாவது நொறுக்ஸ். இரவு முக்யமாக பலகாரம். இதை ருசி குறையாமல் தயாரிக்க வேண்டும். தயாரிக்க ஸ்டவ், காஸ் அடுப்பு எல்லாம் என்ன என்றே தெரியாத காலம் ஆச்சே. ஆகவே மூன்று குமிழ் வைத்த களிமண்ணால் வேயப்பட்ட மெழுகிய அடுப்பு. அதை நிரப்ப தோட்டத்தில், காட்டில் வெட்டப்பட்ட மரங்கள் விறகு என்று வெயிலில் காய வைத்தவை. , சுள்ளிகள். புகையை ஊதி அப்புறப்படுத்த ஊதாங்குழல் என்று இரும்பில் செய்யப்பட்டு வீட்டுப் பெண்களால் மார் வலிக்க ஓதப்படும். கண்களில் நீர் வடியும். 

சாதம் வடிக்க பிரிச்டீஜ் குக்கர் கிடையாது. பெரிய பித்தளை தவலை அல்லது பெரிய வெண்கல பானை. சில வீடுகளில் பானை. அரிசி கொதித்து சாதமாகிவிட்டது என்று தெரிந்தவுடன். அதன் மேல் ஒரு தட்டு மூடப்பட்டு துணியால் குறுக்கே கெட்டியாக இருகைகளாலும் பிடித்துக்கொண்டு இறக்கி கஞ்சி வடிக்கப்படும். காஞ்சி ஆறியவுடன், கொஞ்சம் மோர் பெருங்காயம், உப்பு போட்டு ஜலம் சேர்த்து குழந்தைகள் சாப்பிட்டு விடும். சூடான கஞ்சியோடு கொஞ்சம் பால் சேர்த்து நாட்டு சர்க்கரை போட்டு சூடாக பருக பெரியவர்கள் காத்திருப்பார்களே.

வீட்டில் நிறைய குழந்தைகள் வளைய வரும்.  வீடு என்றால் ஒட்டு வீடு. ரெண்டு கட்டு மூன்று கட்டு என்று உள்ளே உள்ளே போய்க்கொண்டே இருக்கும். பின்னால் கொல்லை வரை செல்லும். கன்றுக்குட்டி பசு எல்லாம் பின்னால் காத்திருக்கும்.

அவர்களுக்கு உணவு மூன்று வேளையும் . உணவு என்றால் வெறும் சாதம், குழம்பு, ரசம், காய், தயிர் என்று இல்லை. ஏதோ ஒரு சாதம். அதை தனித் தனி தட்டுகளில் உண்பது வழக்கம் இல்லை. அனைத்து அரை டிக்கெட்களும் 3லிருந்து 15 வரை வரிசையாகவோ வட்டமாகவோ உட்கார்ந்திருக்கும் . வட்டத்தின் நடுவே பெரிய பாத்திரத்தில் கலந்த சாதம், பிசைந்த சாதம் தயாராக இருக்கும். ஒரு முதியவள், பாட்டியோ, அத்தையோ, சித்தியோ, அம்மாவோ அதை வட்டத்தின் உள்ளிருந்து ஒவ்வொரு நீட்டப்பட்ட கையிலும் போடுவாள். ஒரு கைக்கு போட்டு விட்டு மறு கைக்கு நகர்வாள் . ரெண்டு சுற்று, மூன்று சுற்றிலேயே பாத்திரம் நிறைய இருந்த தயிர் சாதமோ, குழம்பு சாதமோ, ரசம் சாதமோ காலி யாகிவிடும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஒவ்வொரு கைப்பிடியிலும் ஏதாவது ஊறுகாயோ, காயோ வைத்து கலந்து தான் போடுவாள். தேவாம்ருதமாக இருக்கும் அந்த சாப்பாடு. பசி, இப்போது மாதிரி நொடிக்கு ஒருதரம் திறந்து உள்ளே வேட்டையாட குளிர் சாதன பெட்டிகளோ, அலமாரியில் பிஸ்கட்டோ கிடையாதே. சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பொழுது போக்க டிவியோ கம்ப்யூட்டரோ, ஐபாடோ கிடையாது. ரேடியோ என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவரோடு ஒருவர் பேச டெலிபோன் கூட இல்லாத காலம். இப்போது மாதிரி கர்ண குண்டலமாக ஒட்டிக்கொள்ள ஒரு மொபைல் தொலைபேசி, கைப்பேசி கிடையாது. குடிக்க ஆர்வோ தண்ணீர் கிடையாது. ஆற்றிலிருந்து மொண்டுவந்த தவலையில் உள்ள ஜலம், அல்லது பானையில் உள்ள நீர் தான் எல்லோருக்குமே.

அன்றன்று தயாரிக்கும் உணவுக்கு அரைக்க கரைக்க மிக்சி கிடையாது. கல்லுரலில் நிறைய அரிசி, பருப்பு போட்டு மாங்கு மாங்கு என்று அரைப்பார்கள். காலை நீட்டிக்கொண்டு சிலர் அரிசி, பருப்புகளை எந்திரம் என்னும் இரு வலுவான வட்ட கல்லுக்குள் போட்டு அரைப்பார்கள். கீழ் வட்டக்கல் அசையாது. மேல் வட்டக்கல் ஒரு மர அச்சில் பொருத்தப்பட்டு ஒரு முனையில் கைப்பிடியாக ஒரு மரக் கோல்.உபயோகித்து உபயோகித்து அந்த கைப்பிடி வழு வழுப்பாக இருக்கும். அரிசி நாம் வாங்குவது போல் பையில் வராது. நெல்லை குதிரிலிருந்து அப்பப்போது எடுத்து, புடைத்து, தூசி தும்பு நீக்கி, உரல் ( இதுவும் ஒரு கல்லால் ஆன உபகரணம்) அதன் வாய்க்குள் நிறைய நெல்லை போட்டு, மர உலக்கையால் இடிப்பார்கள். நெல்லை உமி நீக்கி, குருணை நீக்கி, அரிசியாக சேகரித்து அதை பெரிய பானைகளில் போட்டு வைப்பார்கள். அரிசிப்பானை இல்லாத வீடு அப்போது இல்லை.

பெரிய பானைகளில் புளி , வெல்லம், எல்லாம் சேகரித்து வைத்திருப்பார்கள். மளிகைக் கடைகள் என்று நிறைய கிடையாது. வீட்டுக்கு தேவையான அரிசி பருப்பு புளி காய்கறிகள், எல்லாம் அவரவர் நிலத்தில் இருந்தே கிடைக்கும். எண்ணெய் செக்கிலிருந்து ( ஒத்தை அல்லது சில பெரிய செக்குகளில் ரெட்டை மாடு) சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். எள்ளு, கொப்பரை ஆகியவைகளை செக்கில் இட்டு அதை வழ வழப்பான கனமான ஒரு உலக்கை போன்று ஒரு உபகரணம் அரித்துக்கொண்டிருக்கும் அந்த உலக்கையின் கழுத்தில் இருந்து வரும் கயிறு மாட்டின் நுகத்தடியிலிருந்து வரும் மரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். மாடு நகர நகர, சுற்றி வர, அந்த தடியான மர உலக்கை செக்கில் உள்ள கொப்பரையையோ எல்லையோ நசுக்கி எண்ணையாக அரித்துக்கொண்டிருக்கும். பிறகு தெளிய வைத்து வடிகட்டி எண்ணையை பீப்பாய்களில் நிறப்பி விற்பார்கள். வீசை தோலா கணக்கு அப்போது. காலணா, அரையணா, மொட்டைத்தலை எட்வர்ட் ரூபாய், கிரீடம் வைச்ச விக்டோரியா ராணி போட்ட வெள்ளிக்காசு என்று இருந்தது.

விளக்கு வெறும் அகல் அல்லது, சிம்னி என்ற கண்ணாடிக்குடுவை போட்ட விளக்கு. உள்ளே கெரசின் பாட்டில் இணைக்கப்பட்ட திரி. ஹரிக்கேன் விளக்கு எங்கு போனாலும் தூக்கிக்கொண்டு போவார்கள். டார்ச் என்ன என்று தெரியாது. தெருவில் நாலு பக்கமும் கண்ணாடி பிரேம் போட்ட ஒரு கூண்டில் தினமும் ஒருவன் சாயந்திரம் வந்து விளக்கை ஏற்றிவிட்டு போவான். சில நேரங்களில் எண்ணெய் தீர்ந்து போய் விளக்கு அணைந்துவிடும். அல்லது நாலு பக்க கண்ணாடியில் எதிலாவது விரிசல் அல்லது ஓட்டை இருந்து அதன் வழியே காற்று போய் விளக்கு அணைந்து விடும். இரவில் அதிக நடமாட்டம் கிடையாது. தெருவெல்லாம் புழுதி தெரு தான். நடந்து நடந்து இரவில் கூட வெள்ளையாக பாதை தெரியும்

தெருவில் நடமாடும் வண்டிகள் குதிரை வண்டிகள், பணக்காரர்கள், ஜமிந்தார், மிராசுகள் பயணிக்கும் காளை பூட்டிய வில் வண்டி, மைனர்கள் சவாரிக்கும் ரேக்ளா. இது ஒரே ஆள் மட்டும் சாய்ந்துகொள்ளாமல் முதுகு நிமிர்த்தி உட்க்கார்ந்துகொண்டு ஒத்தைக் குதிரையை இயக்கும் வேகமான குதிரை வண்டி. பாதசாரிகள். எங்கள் கொள்ளுத் தாத்தாவுக்கு ஒரு சட்டை கூட கிடையாது. கையில் கூஜாவுடன் பல காத தூரங்கள் நடை. கையில் ஒரு பழுக்காத் தடி (பாணா தடி என்றும் பெயர் உண்டு) . . வழியில் ஏதாவது கள்ளர், மிருகங்கள் குறுக்கிட்டால் தற்காப்புக்கு. காலில் பாதரோட்டுக் கட்டை. குமிழ் வைத்த மரத்தாலான ஒரு காலனி. குமிழ் கால் கட்டை விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் பிடிப்பாக இறுக்கிக்கொண்டு நடக்க உதவும்.

பொழுது போக்கு ஊர்க் கோவிலில் நடக்கும் உற்சவங்கள், விழாக்கள், அங்கும் பார பட்சம் உண்டு. யாருக்கு முதல் மரியாதை என்பதில். யாருக்கு உரிமை ஜாஸ்தி என்று அவர்களுக்குள்ளேயே சிலருக்கு போட்டியிருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். எப்படியோ சமாளிப்பார்கள்.

 முடி திருத்தகம் எல்லாம் கிடையாது. ஊரில் நாவித குடும்பம் இருக்கும். அவர்கள் வாடிக்கைக் காரர்கள் வீட்டுக்கு மாதத்திற்கொரு முறை அல்லது ரெண்டு மாதத்திற்கொருமுறை வருவார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் அரை இஞ்சில் அப்பளா குடுமி. (முன் பாதி மண்டை, காதுக்கு மேலாக மழிக்கப்பட்டு) பின் மண்டை மட்டும் கருப்பாக இருக்கும். இடுப்பில் நாலு முழ துண்டு. இது தான் பள்ளிக்கூடத்துக்கும் யூனி பார்ம். 


பள்ளிக் கூடம் என்றால் ஏதோ கட்டிடம் என்று நினைத்துகொண்டு ஏமாந்து போக வேண்டாம். வாத்தியார் வீட்டு திண்ணை தான். வாத்தியார் கிட்டத்தட்ட இதே யூனிபார்ம் தாம். நாலு முழ துண்டுக்கு பதிலாக எட்டு முழ தட்டுச் சுற்று அல்லது பஞ்ச கச்சம். வெள்ளை என்று ஒரு காலத்திலும் அந்த வேஷ்டி இருந்ததில்லை. ஏறக்குறைய காவியேறி இருக்கும். மேல் துண்டு தோளிலோ வேட்டிமேலோ கட்டப்பட்டு இருக்கும். அப்பளா குடுமிக்கு பதிலாக வழுக்கை பாய்ந்த குடுமி. தாடி மீசை எக்ஸ்ட்ரா .

அவர் சொல்வார் பையன்கள் திருப்பிச் சொல்வார்கள். மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். சிலர் ஏடு வைத்திருப்பார்கள் அதில் எழுத்தாணியால் புள்ளி புள்ளி யாக பொரித்துக் கொள்வார்கள். ஆசிரியருக்கு பீஸ் என்ன தெரியுமா. வீட்டில் காய்த்த புடலை, கத்திரி, மிளகாய். நெல், வீட்டில் கடைந்த வெண்ணெய். சொம்பில் பால். தீபாவளி பொங்கல் சமயத்தில் சில பணக்கார மாணவர்கள் வீட்டிலிருந்து வேஷ்டி மேல்துண்டு. ரொம்ப பணக்கார பிள்ளைகள் பொன் காசு கொண்டு வந்து தந்து நமஸ்காரம் பண்ணுவார்கள்.

இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது ? நமக்கு பதில் சொல்ல யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். கொலஸ்ட்ரால், பீ பி, கிட்னி ஸ்டோன் , எம் ஆர் ஐ ஸ்கேன் எல்லாம் பிறக்காத காலம் என்பதால் சுகத்தை தவிர இன்பத்தை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை

No comments:

Post a Comment