Monday, October 9, 2017

வடாம் போடும் கல்யாணம் ......

வைகாசி பிறப்பதற்கே காத்துக் கொண்டிருந்தார் போல், பீனிக்ஸ் பறவை போல் அம்மாவுக்கு புது எனெர்ஜி வந்து விடும். என்ன, எல்லாம் வடாம் போடும் கல்யாணம் தான்.
2 நாள் முன்னாடியே நல்ல அரிசியை, ஜவ்வரிசியை பார்த்து வாங்கி, அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷினுக்கு தானே போய், முதலில் கொஞ்சம் வரட்டரிசி போட்டு அரைத்து விட்டு , அப்புறம் வடாத்து அரிசியை போட்டு அரைத்து வருவாள். யாரிடமும் நம்பிக்கை கிடையாது.
முதல் நாள் பெரிய மார்கெட் போய் தாராளமாக பச்சை மிளகாய், நல்லதாக பொறுக்கி எலுமிச்சை பழங்கள் என்று வாங்கி வருவாள்.
வடாத்து மாவு கிளற என்றே ஒரு அருக்கஞ்சட்டி, பெரியது இருக்கும். ராத்திரியே பச்சைமிளகாயும், உப்பும் வைத்து கல்லுரலில் மையாக அரைத்து வைத்து விடுவாள். விடிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு காப்பியை குடித்தால் , மாவு கிளரும் படலம். எப்படித்தான் அவ்வளவு மாவை கொட்டி பதமாக கிளற முடிந்ததோ. !
அதை ஒரு மணி நேரம் போல ஆற விட்டு, எல்லா சாமான்களையும் (தண்ணீர் கூட) மொட்டை மாடிக்கு ஏத்துவாள். வடாம் பிழிய ஓலைப் பாய்.
மாவில் பச்சை மிளகாய் அரைத்த விழுதை போட்டு, எலுமிச்சை பிழிந்து, ஒரு பெரிய தாம்பாளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, கையால் சேர்த்து பிசைவாள். உப்பு, காரம் பதமாக இருக்கும்.
பிறகென்ன, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதம் என்று, இந்த கல்யாணம் 1 வாரம் ஓடும். பிஸ்கட் டின் களில் ஒவ்வொரு வடாமும் ஒரு டின் நிறைய இருக்கும்.
இதில் எங்கள் பங்கு காவல். என் பெரிய அக்கா மட்டும் பிழிவதில் ஹெல்ப். அம்மா மாவை அச்சில் போட்டு தர, அக்கா பிழிந்து விடுவாள். நடுவில் ஒரு செகண்ட் டோஸ் காப்பி.
அந்த காவல் கொடுமை. வெய்யிலும் வெக்கையும் தஹிக்கும்.
கையில் கட்டு புஸ்தகம். கதை புஸ்தகம் தான். கையில் ஒரு கம்பு - காக்காய் விரட்ட. காக்கா ரெடியா இருக்கும் செவுத்துக் கட்டையில்.
ஒரு வடாத்தை பிச்சு திங்கலாமான்னு இருக்கும். ஆனா அம்மா கண்டு பிடிச்சுடுவா. "அங்கே ஓரத்தில் ஒரு வடாம் குரயறதே ; எங்கே" என்பாள். தின்னுட்டேன் என்று சொன்னால் அதற்கு திட்டு விழும்."அதான் கிளறின மாவு குடுத்துட்டேனே" என்று. காக்காய் கொத்திடுத்து என்று பொய் சொன்னால் அதற்கும் திட்டு விழுந் "துப்புக்கேட்டவளே" என்று.
நான் கடைசி, செல்லம் என்பதால், எனக்கு ஸ்கூல் லீவு நாளான சனி அல்லது ஞாயிறு அரை நாள் தான் ட்யூடி.
இப்போது இதெல்லாம் சாத்தியமா? நானும் பிழிந்திருக்கிறேன் குழந்தைகள் சின்னதாக இருக்கையில்.




No comments:

Post a Comment