Monday, October 23, 2017

coffee puraanam Part 2

coffee puraanam Part 2

இதோட இந்த காபி கடைய மூடறேன்...
கணேஷ் wife பவித்ராவுக்கு, காபி போட  தெரியுமா இல்லையா என்று தெரியாது. 
(ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கோ... யாருக்கு நல்ல காபியின் ருசி தெரியுமோ, அவாதான் நன்னா காபி போடுவா)

கணேஷ் கல்யாணம் முடிந்து முதல் தடவை அமெரிக்கா கிளம்பினேன். 
அதனால்.. நான் கிளம்பும்போதே, மனதளவில் தயாராகத்தான் போனேன். 
(எல்லாரும் ஊருக்குப் போக pack பண்ணும்போது, முதலில் ஒரு சின்ன சாமி படத்தை பெட்டியிலே முதலில் வைப்பாள். நான், என் பில்டரையும் , காப்பி பொடியையும் தான் முதலில் வைத்தேன் !!)
ஒண்ணு சொல்லியே ஆகணும்... அஞ்சு வட நாட்டு சமையலில் கெட்டி. இப்போ சாம்பார் ரசமும்.
பவித்ரா நம்ம தஞ்சாவூர் சமையல் பிரமாதமாகப் பண்ணுவாள் 

ஊரிலிருந்து கிளம்பும்போதே.. இவர் "நான் போய் ஒரு மாதம் ஜாலியாக இருக்கப் போறேன். அவா  லைப் ஸ்டைல் எப்படி இருந்தாலும், எதையும் கண்டுக்காமல், மனதளவில் எதற்கும் வருத்தப் படாமல் "சூதனமாக" இருக்கப் போறேன்... " என்றார்.
அப்பாடா... இந்த "சூதனமாக" என்ற தமிழ் வார்த்தையை, சரண்யா ஒரு படத்தில், பிள்ளை வெளியூர் போகும்போது சொல்வாள். "சூதனமாக இருந்துக்கப்பா " என்று.
அந்த வார்த்தைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்... "சாமர்த்தியமாக இரு", "புத்திசாலியாக பொழச்சுக்கோ" "எல்லாரிடமும் அவாளுக்கு எத்த மாதிரி நடந்துக்கோ".. என்று சொல்லிக்கொண்டே போகலாம் !!

இப்ப நான் சமத்தாக... இல்லை இல்லை சூதனமாக நம்ம கதைக்கு வரேன்....
அப்பாடா... சுமார் இருபது மணி நேர பயணத்துக்கு அப்புறம்...போய்  சேர்ந்தேன். வீட்டுக்கும் போனேன் ...
நுழைந்து செருப்பை கூட அவிழ்க்க வில்லை.. குசலம் விசாரிக்க வில்லை. கணேஷ் "அம்மா, ஒரு நல்ல காப்பி போட்டுத்தா.." என்றான். (முதலில் டாக்ஸி யிலேயே பெட்டியில் இருக்கும் சமாச்சாரத்தை கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான்)
சரி என்று, இவர் சூட் கேஸிலிருந்து உபகரணங்களை மேடையில் பரப்பினார். பில்டரில் பொடியை போட்டு, வெந்நீர் விட்டு, ஒரு குளியல் போட்டு வரதுக்குள்ள, அஞ்சு நட்சத்திர ஹோட்டல் ல ஒரு காப்பிக்காக அரை மணி நேரம் காத்திருக்கும் ஜென்மங்கள், காப்பி, காப்பி என்று கூப்பாடு. ஒரு வழியாக காபி போட்டுக் குடுத்து.. கணேஷ் ஆர்வமாக குடிப்பதை கண்ணார கண்டு... அப்புறமாகத்தான் வீட்டை பார்த்து, பவித்ராவிடம் பேசி எல்லாம் !! இது வரை ஒரு ஏமாற்றமும் இல்லை. அதான் எனக்கு தெரியுமே... எனக்கும் எவ்வளவு பக்குவம் !!!

பெரிய குண்டு அப்புறமாக வந்தது.
கொஞ்சம் பின்னோக்கி...
பவித்ரா research பண்ணிக் கொண்டிருந்தாள். இந்தியன் பாலிடிக்ஸில் . அதற்காக மூன்று மாதம் இந்தியாவுக்கு பயணம். நாங்கள் வந்ததும், எங்களுக்கு பதினைந்து நாட்கள் ஒதுக்கி வைத்து, தன் ட்ரிப் பை பிளான் பண்ணி இருந்தாளாம். ஆனால், சில பல காரணங்களினால் அவள் பிளான் மாறிப்  போக, இது தெரியாத நான் , "அய்யா ... பதினைந்து நாட்கள் நோ சமையல்... உக்காந்து சாப்பாடு" என்று
"காத்திருந்தேன், காத்திருந்தேன், காலமெல்லாம் காத்திருந்தேன், காத்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா"... "சங்கடமான சமையலை விட்டு, சங்கீதம் பாடப்போறேன்.." இன்ன பிற போன ஜென்மத்தில் கேட்ட பாடல்களை எல்லாம், அடி பிறழாமல் பாடிக்கொண்டு வந்தேன்.
அய்யகோ... "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்ற பாட்டுக்கு தள்ளப் பட்டேன்... நான் போனது செவ்வாய்... பவித்ரா இந்தியா கிளம்பியது வியாழன் ! செவ்வாய் இரவு சமைத்தது ரொம்ப மிஞ்ச, புதன் அவள் ஸ்கூல் போக, பையன் சொல்லி விட்டுப் போகிறான்,
"அம்மா, ராத்திரிக்கு ஜோரா வத்தக் குழம்பு வை " ன்னு.(இந்த டயலாக் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா.. ரமேஷும் அதே சொன்னான்..!!!)
ஆச்சு, வியாழன் பூரா, packing - மாலை நாலு மணிக்கு புறப்பாடு... இப்போ கிச்சன் என் ஆளுகையில்... எப்படி இருக்கும்...!!!
ஆனால், நான்தான் இப்போ மாறி விட்டேனே... அதையும் ஏத்துக்கொண்டு, கறிகாய் வாங்கி, நறுக்கி, சமைத்து, துடைத்து.... உங்களுக்கே சீக்வன்ஸ் தெரியும்..
ரமேஷ் வீட்டில் 49 வயதில்... இப்போ 70 வயதில்... "மாற்றம் ஒன்றே மாறாதது ... இல்லை இல்லை நம் வாழ்க்கையில் நிறைய "மாறாதது" நடக்கும்.

சரி ... இந்த காபி புராணத்தை  இப்படியே நிறுத்துவோம்.. (ஆனால் ஒண்ணு.. எனக்கும் நாக்கு நீளம்.. நல்ல காபி வேண்டும்.. அதை நான்தான் போட்டுக்கொள்ள வேண்டும் !!!)
ஆனால் ஒரே ஒரு சந்தேஹத்தோடு முடிக்கிறேன்...
சென்னையில் , என்காத்தில், குழந்தைகள் எல்லாம் சேர்ந்தால், எனக்கு முதல் காப்பி; அடுத்தது எழுந்திருப்பவர்களுக்கு தனியாக ஒரு தரம் கலக்கல்.. இப்படி ஒவ்வொருத்தருக்காக குடுத்து முடிக்க.. முதலில் சாப்பிட்டவருக்கு இரண்டாவது டோஸ்...நான் எரிச்சலில் சொல்வேன்.. "டீக்கடை மாதிரி பாய்லரில் கொட்டி வைக்கிறேன்.. எடுத்துக் குடியுங்கள்  என்று.. " அப்பவும் குழந்தைகள் "அம்மா, அப்பவும் நீதான் டம்ளரில் எடுத்து, கொண்டு குடுக்க வேண்டும் " என்பார்கள்.
அப்ப மட்டும் அந்த "அம்மா" வில் பாசம் பொங்கி வழிந்து ஓடும் !!!
மற்றபடி ரமேஷ், கணேஷ், அஞ்சு, பவித்ரா எல்லாரும் ஆசையாக இருப்பார்கள். 
இப்போது, ரமேஷ், இன்ஸ்டன்ட் வாங்கி வைத்து, காலை அஞ்சு மணிக்கு (அஞ்சு தூங்குகையில்) தானே கலந்து குடிக்கிறான்.
கணேஷ் , 'அமெரிக்கன் காபி, இட்டாலியன் காபி' என்று சொல்லி ஏதோ சில பல மெஷினில் போட்டு, சுவைக்கிறான்...

பெண் வீட்டுக்கு உரிமையோடு போனால்; காலையில்  முதல் சுப்ரபாதம், " அம்மா, காபி குடுக்கறயா ?'' 
இது எப்படி இருக்கு !!!!! 

No comments:

Post a Comment