Friday, October 27, 2017

பிறந்த நாள்......

எங்கம்மாவாத்தில் எல்லார் பிறந்த நாளும் கொண்டாட வசதி இல்லை. அன்று ஒரு பாயசம் மட்டும் உண்டு.
நான் லக்கி. எனக்கு 3 ம் தேதி பிறந்த நாள். அப்பாக்கு சம்பளம் 1 ம் தேதி வரும். கையில் கொஞ்சம் பணம் புரளும்
(ஒன்றிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... தேதி 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம்)
எனக்கு சீட்டியில் (அது ஒரு வகை துணி) பாவாடை சட்டை உண்டு. (என் வாழ்க்கையில் நான் ஒரே ஒரு கவுன் தான் போட்டிருக்கிறேன்). 
அப்போதெல்லாம் சாக்கலேட் கொடுக்கும் வழக்கம் கிடையாது - யாருக்குமே.
டிசம்பர் மாதம் ரோஜா சீசன். 4 அணாக்கு க்கு 30/40 பூ கிடைக்கும்... ரோஸ் நிறத்தில். அப்போதெல்லாம் நான் வேற கலர் ரோஜாவே பார்த்ததில்லை. !!
ரோஜா வாங்கி, துணிப்பையில் (பிளாஸ்டிக் இல்லாத நல்ல காலம்) போட்டு தருவா. ஸ்கூலில் எல்லா டீச்சருக்கும் குடுப்பேன். எல்லா டீச்சரும், சந்தோஷமா தலையில் வெச்சுப்பா. எனக்கும் சந்தோஷமா இருக்கும்.
இப்படியாக என் பிறந்த நாள் இனிமையாக கழியும்.
ஆனால் நான் S.S.L.C. படிக்கும் போது (school final) ஏதோ காரணத்தால் அப்பாக்கு எனக்கு புதுசு வாங்க முடியல்ல. அன்றைக்கு கண்ணீர் விட்டு அழுதா. பசுமையா நினைவிருக்கு. நான்தான், "நான் என் தீவாளி டிரஸ்ஸை போட்டுக்கறேன்" என்று சொல்லி சமாதானம் பண்ணி, ரோஜா மட்டும் எடுத்துண்டு போனேன்.
மறக்க முடியவில்லை.... மறக்க முடிய வில்லை...இப்போது எவ்வளவு தான் கொண்டாடினாலும், அது அதுதான்... இது இதுதான்.

No comments:

Post a Comment