Monday, June 10, 2019

சென்னையில கரெக்டா வழி.........

சென்னையில கரெக்டா வழி சொல்ல என்னை யாரும் அடிச்சிக்க முடியாது.

உங்களுக்கு அண்ணா நகர் போகணும்னா, நான் சொல்ற வழியில் போனா, அரக்கோணம் வந்துடும் !!
நான் அவ்வளவு மோசம் in topography !!

Driver ஓட்ட, நான் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்க, "இறங்குங்கம்மா, இடம் வந்தாச்சு" ன்னு சொன்னா இறங்குவேன்.

நாங்கள் இருவரும் சி.ஐ.டி. காலனி யில் வாக்கிங் போவோம். இரண்டு சுற்று முடிந்ததும், என்னை கழட்டி விட்டுட்டு, இவர் மூணாவது சுற்றுக்கு போவார். எங்கே விட்டாரோ (ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம்) அங்கிருந்து டி. டி. கே. சாலை போக வழி தெரியாது.

ஒரு நாள், இவர், வலது பொய், இடது போய், ஸ்ட்ரைட் ஆ போய் ன்னு ஏதோ சொல்ல, பலம்மா தலை ஆட்டிட்டு கிளம்பினேன். தெரு முக்குக்கு வந்ததும், கான்பிடண்டா ராங் சைடு திரும்பி நடந்தேன். திடீரென்று, இசபெல் ஹாஸ்பிடல் வந்துடுத்து. எனக்கு ஒண்ணும் புரியல்ல. எதிர் சைட் வந்துட்டோம்னு தெரிஞ்சிது. ஆனா, இப்போ எப்படி திரும்பறது? ரோடை கிராஸ் பண்ணி, ஹாஸ்பிடல் வாசலுக்கு போய் இரண்டு பக்கமும் பார்த்தேன். தப்பு புரிந்தது. அப்பவும் சந்தேஹத்துக்கு, fly ஓவர் எந்த பக்கம்னு கேட்டுட்டு நடந்தேன். அந்த ஆள் வேறு பின்னாடியே ! ஒடனே எனக்கு பார்த்த சினிமா எல்லாம் ஞாபகம் வரது ! என்னை அடிச்சா நாலு பவுன் தேறும். வேக வேக மாக நடந்து, (ஒலிம்பிக் ஸ்பீட்) ... CPR Road Fly Over பார்த்ததும் வழி புரிந்தது.

மற்றொரு நாள், இப்படித்தான் வலது, இடது என்று திரும்பி ஆர்.கே. சாலை க்கு வந்து விட்டேன். எதிர்த்தாற்போல் மியூசிக் அகாடமி. அப்பா... அங்கிருந்து இடது திரும்பி, நேரே டி.டி.கே. சாலை முழுதும் நடந்தால், இவர் அடுத்த ரௌண்டயும் முடித்து, பிள்ளையார் கோவில் முன் கன்னத்தில் போட்டுக்கொண்டு நிற்கிறார். (மூணாவது ரவுண்ட் முடிந்து) . "பிராரப்தம்" என்று தலையில் அடித்துக்கொண்டார்.

ஆட்டோ  வில் ஏறினால் இடத்தை சொல்லி விட்டு, உட்காந்து விடுவேன். ஆனால், வழியை பார்த்தால் சந்தேஹமாக இருக்கும் (சினிமா, சினிமா) . டிரைவர் மூஞ்சியில் பெரிய மறு, வெட்டுக்காய தழும்பு இருக்கான்னு பார்ப்பேன். (என்னை கடத்தி என்ன ஆகணும்.... ஒ... காதில் வைரத்தோடு !!!) எனக்கு ரொம்ப தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ள, "ஏம்பா இந்த வழியில போறே; அப்படி போயிருந்தால் சீக்கிரம் போகலாமே?" ன்னு சும்மா சொல்லி வைப்பேன் (எனக்கு எல்லாம் தெரியும் என்று !!!) என் பேச்சை கேட்டு திரும்பினான், செங்கல்பட்டு தான். ஆனால், நல்ல வேளை ஆட்டோ காரன் கூட என் பேச்சை கேட்பதில்லை !!!!

மைலாப்பூர் கற்பகம் காலனியில் கோச்சிங் சென்டர். அந்த ரோட் ஒன் வே . போனில் யாராவது வழி கேட்டால், அவா எங்கேருந்து வந்தாலும் சரி; எனக்கு தெரிந்தது ஒரு வழிதான்.
"நாகேஸ்வரா பார்க் கிட்ட வாங்கோ; பக்கத்தில அமிர்தாஞ்சனம் பாக்டரி இருக்கும். ரோடை கிராஸ் பண்ணுங்கோ. எங்க ஸ்ட்ரீட் வரும். ஆனால் அது ஒன் வே. அதற்குள் நுழைய வேண்டாம். லஸ் பக்கம் போய், விவேகானந்தா காலேஜ் போய் ....." என்று நான் வழி சொல்ல, என் பெண்ணும், ஹஸ்பண்டும் போனை பிடுங்கி வழி சொல்வா. இன்னி வரைக்கும் இது ஒரு பெரிய ஜோக் எங்காத்தில்.

ஆனா, நல்லப்பன் தெருவிலிருந்து (கோச்சிங் சென்டர்) எங்கள் வீட்டுக்கு வழி தெரியும் !! சில ஆட்டோ காரன், சிக்னலை தவிர்க்க, சாய்பாபா கோவில் தெரு வழியாக போவான். ஆள்வார்பேட் சிக்னலை பார்க்கும் வரை 'காப்ரா' தான்.

இன்னொரு பெரிய வீக்னெஸ், காரில் போவது போல், ஆட்டோவில்  உக்காந்து... "உம... போப்பா" என்பேன். "எங்கே" என்று அவன் கேட்டப்புறம் தான் எனக்கு நினைவு திரும்பும். மொத்தமாக வழி சொல்லாமல், "நீ போயிண்டே இரு; நான் சொல்றேன்" ன்னுடுவேன். ஆனால்... "கற்பனை உலகம்... சஞ்சரிப்பு..." திடீரென்று, "இடது பக்கம் திரும்பு" என்று கத்துவேன். அவனுக்கு தூக்கி வாரி போடும். ரெண்டு 'டோஸ்' வாங்கிப்பேன்.

எங்கக்காவாத்துக்கு K.K. Nagar போக, சுமார் பத்து பேரிடம் வழி கேட்பேன்.

எல்லாத்தையும் விட டாப் : வேளா சேரியில் "A " ப்ளாக்கில் என் பெண் வீடு. நான் பாட்டுக்கும் 'B ' பிளாக் போய் , எட்டாவது மாடி போய், நாலு flat ஆயும் பாத்துட்டு, கீழே வந்து, 'A ' கண்டு பிடித்து, எட்டாவது மாடி போய், நின்று நாலு பக்கமும் பார்த்து, நேம் போர்ட் பாத்துதான் கண்டு பிடிப்பேன் !!! பத்து வருஷமா அங்கே அவள் இருக்கா.

யாருக்கு, சென்னையில் எங்க போகனும்னாலும் என்னை கேளுங்கோ . கரெக்ட்டா  , ஷார்ட் கட் சொல்லித்தரேன். !!!!

No comments:

Post a Comment