Wednesday, June 12, 2019

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.......

பெரிய நெல்லிக்காயை கடித்து தின்று, அதன் புளிப்பை ருசித்து, உடனே தண்ணீர் குடித்தால், ஒரு சில்லிப்பும், தித்திப்பும் வருமே.. ஆஹா...ஆஹா...
கொடுக்காப்புளியின் துவர்ப்பும், கலாக்காயின் புளிப்பும் .. முகத்தில் ஒரு 'சுளிப்பு', நாக்கில் ஒரு சப்புக்கொட்டு... ஒஹ் ஒ.ஒ.ஒ.ஒ.
உப்பு மட்டும் பொட்டலம் கட்டி எடுத்துப் போய் - மாங்காயை (யார் வீட்டுதோ தான் !!) பறித்து, அதை அலம்பினதில்லை, நறுக்கியதில்லை... அப்படியே ஒரு கடி கடித்து, மாங்காயின் உள் வெள்ளை பாகம் தெறித்தும், அதை உப்பில் தோய்த்து....நாக்கை மடித்து... பல்லை அதன் மேல் வைத்து... த் த் ட்டா என்று சத்தம் எல்லோரிடமிருந்தும் ஒரு தாள கதியில் வர, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, சந்தோஷமாக புன்னகை செய்தது... அம்மம்மம்மா !!
அர நெல்லிக்காய் மரத்தை உலுக்கி , கீழே விழும் காய்களை பொறுக்கி, பாவாடையில் துடைத்து விட்டு (மண்ணை தான்) ஆளுக்கு ஒரு கை அளவு தின்ற ருசி... இன்னும் நாக்கில்..
தஞ்சாவூரில் கிடைக்கும் முழு முந்திரிக் காயை, கொஞ்சம் கரி போட்டு, தணலாக்கி, அதில் போட்டு சுட்டு, குச்சியால் திருப்பி, திருப்பி சுட்டு, ஒரு கல்லால் ஓங்கி ஒரு போடு போட்டு, மேல் ஓட்டை எடுத்து விட்டு, வெந்தும் வேகாமலும் இருக்கும் உள் பருப்பை சுவைத்த நாட்கள்.....
காக்காய் கடி கடிக்காமல் கடலை உருண்டையை சாப்பிட்டதில்லை... ஆனால் நேராக கடிக்காமல், பாவாடை / சட்டையால் மூடி கடிப்போம்.. சுத்தமாம் !!!!
முந்திரிப்பழம் ஒரு 'கூறு' வாங்கி, ஆளுக்கு ஒன்று என்று பங்கு போட்டு, கடித்து சாப்பிட்டு, நாக்கில் அறிப்பெடுப்பதை கூட ரசித்த நாட்கள்....
கரும்பை என்றைக்காவது நறுக்கி சாப்பிட்டிருப்போமா... ஆளுக்கு ஒரு நீள துண்டு... வாயின் ஒரு பக்கத்தில் வைத்து, பல்லால் மேல் பட்டையை ஒரு கணு வரை இரித்து துப்பி, கடித்து சாப்பிடும் சுகம்... இப்போ சென்னை குழந்தைகள் அறியாதது....
பரங்கிக்காயை வெட்டினால், உள்ளே பருப்பு இருக்கும் - நிறைய - அவைகளை உலர்த்தி, குழவியால் தட்டி, உள் பருப்பை எடுத்து எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்ட நாட்கள்...
வாழைப்பூ நறுக்கப் படும்போதே, பக்கத்தில் பொறுமை காத்து, உள் பருப்பு (கொஞ்சம் பெரியதாகவே) எடுத்து - ஆளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் , பங்கு போடாமல் முழுதாக சாப்பிடுவது.. இன்றும் தொடருகிறது .. பங்கு போட அவசியமில்லாமல்...
இலந்த பழத்தை பிதுக்கி, அதன் உள்ளே இருக்கும் நெளியும் புழுவை கூட ரசனையுடன் பார்த்து , அதை போட்டு வேறொன்று எடுத்து சாப்பிட்டு கோட்டையை துப்பும் அந்த நேரம்...
வாசலில் 'டொக் டொக்' என்று வேர்க்கடலைக் காரனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாழி....
அம்மா வேக வைத்து கொடுக்கும் முழு கடலையை மடி நிறைய கட்டி, திண்ணையில் உக்காந்து, ஒன்று கூட சாப்பிடாமல், கட்டுப்பாட்டுடன், மற்ற தோழியர் வரும் வரை காத்திருந்து, நடுவில் குமித்து வைத்து, எடுத்து சாப்பிடும் ஒற்றுமையின் சுகம் ரத்தத்தில் ஊறியிருக்கிறது...இன்றும் அதை மேலே கொண்டு வந்து ரசிக்க முடியும் நினைவுகள்..
சண்டை வந்தாலும், அடித்துக்கொண்டாலும், வீட்டில் கோள் மூட்டாத குணம்; நாமும் ஒரு நாள் இது போல் மாட்டுவோம் என்ற சுயனலத்தாலா... இல்லை இல்லை இல்லவே இல்லை... தோழர்களும், தோழிகளும் திட்டு, அடி வாங்கக்கூடாது என்ற குணம்... ஊறிப்போயிருந்தது...
இந்த சிறு பருவ அனுபவங்களின் தாக்கம்...
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், தாங்கிக்கொள்ளும் மனம், குறும்பும், சிரிப்பும் கொப்பளிக்கும் மனம், ஊரோடு ஒத்து வாழும் குணம், தன்னலமற்ற நேர்மை, சூது, வாது, பொய், புனை சுருட்டு... ஒன்றும் இல்லாமல்...
இன்றும் எல்லா தலை முறைகளுடனும் ஒத்து வாழும் தன்மை... இதெல்லாம் அம்மா, அப்பாவின் உபதேசம் கேட்டா வந்தது?
யாரிடம் எந்த நல்ல குணம், நல்ல பழக்கம் இருந்தாலும் - எடுத்துக்கொண்டோம்... ஈகோ பார்க்காமல்..
பணப் பற்றாக்குறையும் ஒரு காரணமோ...??
இன்று செல்வச்செருக்கை அம்மாவிடமே காட்டும், டீச்சரை கூட மதிக்கத்தெரியாத அந்த பணக்காரத்தனம் ... எப்படி சமுதாயம் மாறியது.
வாழ்க்கை சக்கரத்தில், அந்த நாட்கள் மறுபடியும், ஒரு சுற்று முடிந்தவுடன் திரும்பி வருமா... நான் காண்பேனா ??

No comments:

Post a Comment