Monday, June 10, 2019

எண்ணெய் குளியலும் நானும்.......

நேற்று beauty parlor சென்று, தலைக்கு எண்ணெய் 'மசாஜ்' செய்தேனா; அப்போது, என் பழைய நினைவுகள் கிளறி விடப் பட்டன.. என் அம்மாவின் கை அருமை இந்த தேய்த்தலில் இல்லை.
எண்ணெய் கல்யாணம்
ஞாயிற்றுக் கிழமை வந்தாலே, வயிற்றில் புலியை கரைக்கும்.. அம்மாவின் "இங்க வரையா ? தூத்தாமாடி விடுகிறேன்" (அதாவது தீர்த்தம் ஆடுதல் (நதியில்)- திரிக்கப் பட்டது)
வந்தது வினை.
ஒரு "அரை" புடவையை குடுத்து, (அதாவது, ஒரு 9 கஜத்தை இரண்டாக செய்த 4 1/2 கஜம்... எண்ணெய் தேய்க்கும் நாளில் சுற்றிக்கொள்ள மட்டுமே உபயோகிக்கப் பட்டு, தோய்த்தாலும் போகாத கொஞ்சம் சிக்கு வாசனையுடன்
கிழக்குப் பார்த்து உக்கார வைத்து, ஒரு கை லேசாக சூடு செய்யப் பட்ட நல்லெண்ணையை , உச்சந்தலையில் கொட்டி, வலது உள்ளங் கையால் 'தட் தட் ' என்று அடிப்பாள். "நிமிந்து உக்காரேன்" என்று அதட்டல் வேறு... பாவம், அம்மாவால் எவ்வளவு தான் குனிய முடியும் ? ஆனாலும் சில வினாடிகளில் உடம்பு தொய்ந்து உயரம் குறையும்; நம் குடுமியோ அம்மா கையால் இழு படும். !!
தொப் தொப் முடிகையில், "கண்ணுல எண்ண எறங்கித்தா ?" என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் ஆமாம் என்று. இல்லைன்னா சக் சக் தொடரும். நெஜம்மாவே கண்ணில் என்னை இறங்கும்,; தொண்டையில் கரிக்கும்.
பிறகு ஆரம்பிக்கும் நிஜமான எண்ணெய் தேய்த்தல். பொறுமையாக, தலை முடியை புரட்டி, புரட்டி, மயிர்க் கால்களில் படும்படி, எண்ணெய் வைத்து, அழுத்தி அழுத்தி தேய்க்கும்போது; சுகமோ சுகம். வரட்டென்று இல்லாமல், அரிப்புக்கு சொரிந்து கொடுப்பது போல் இதம்.
இரண்டு கையும் என் தலையில், நாட்டியம் ஆடும்; தாளம் போடும்; வாயில் பாட்டு முனகல் வரும்.. என் பொறுமை தீரும் வரை. ஆனால் அந்தப் பொறுமை இல்லாதத் தனம் சட்டை செய்யப் படாதது. !!
பிறகு, "திரும்பி உக்காரேன்" ன்னு ஒரு அதட்டல் - ஏதோ அவள் சொல்லி, நான் மாட்டேன் என்று சொன்னது போல்; துக்கம் முட்டும் - ஏன் இப்படி கத்துகிறாள் ? அப்ப்போது புரியவில்லை அது ஒரு செல்ல கத்தல் என்று; இயலாமையின் வெளிப்பாடு என்று...
பின் தலை முடியை எண்ணெயில் முக்கி, முடியாலேயே, கிண்ணத்தை வழித்து, நுனி முடி வரை தேய்த்து... (அலுத்துக் கொள்கிறார்ப்போல் - "எவ்வளவு மயிர்" என்று பெருமை தொனிக்க ஒரு கமெண்ட்.)
கை காலெல்லாம் என்னால் அழுத்து உருவுவாள். "எப்படி காய்ந்திருக்கிறது ?" என்று ஏதோ அது என் தப்பு போல்... வாரா வாரம் இதையே அலுக்காமல் எப்படி சொன்னாய் அம்மா?
பிறகு "உள்ளே பொய், உடம்பு முழுதும் எண்ணெய் தடவு" என்ற அதட்டலோடு, ஒரு கிண்ணம் தரப்படும்; அது தீரணும் . ஒரு மணி நேரம் ஊறணும். விறகு அடுப்பில், (இரும்பு அடுப்பு), பெரிய தவலையில் வென்னீர் தள தளக்க, அதிலிருந்து மொண்டு ஒரு பித்தளை பக்கெட்டில் ஊற்றி, ஒரு அண்டாவிலும் ஊற்றி, குறைந்த அளவுக்கு, தவலையில் பச்சைத் தண்ணீர் ஊற்றி, வென்னீரை விளாவி... அப்பப்பா எவ்வளவு வேலை..??
ஒரு பிசுக்கேறின மாற ஸ்டூலில் உட்கார வைத்து, சீயக்காய்.
எப்படி அரைக்கப் பட்டது...?
அரப்புக்கட்டி, சீயக்காய், உளுந்து, வெந்தயம், காய வைத்த எலுமிச்சை தோல், எல்லாம் போட்டு, தானே போய் அரைத்து வந்து, காப்பி இல்லாமல் சலித்து வைத்து..
அதை ஒரு பெரிய கிண்ணத்தில் கரைத்து , அதில் சாதம் வடித்த காஞ்சி கலந்து (conditioner) கொண்டு வந்தால், கிலி தான். எண்ணெய் போக அழுத்தி அழுத்தி தேய்த்து, அலசோ அலசு என்று அலசி, ஒரு பக்கெட் தண்ணீரில், தலையை சாய்த்து, almost படுக்க வைத்து, தலை முடி முழுவதும், பாதி தலையும் பாக்கெட்டுக்குள் முக்கி ஒரு கடைசி அலசல்.
"எண்ணெய் தங்கினால் ஜுரம் வரும்; சீயக்காய் தங்கினால் உதிரும்; ஈரம் தங்கினால் ஜலதோஷம் பிடிக்கும்" ... ஒரு டாக்டர் ரேஞ்சில் உபதேசம் நடந்து கொண்டே இருக்கும்.
பிறகு தலையை துடைத்து, (எல்லாம் வெடுக் வெடுக் தான்) சாம்பிராணி, குமுட்டி அடுப்பில் போட்டு, கொஞ்சம் ஆற விட்டு...
அடுத்த கல்யாணம்...
கொஞ்சம் ஈரப் பசை இருக்கரச்சேயே, விரலால் கொத்தி, மெல்ல வலிக்காமல் சிடுக்கேடுத்து, தகையால் இரண்டு தட்டு தட்டி, சின்ன பின்னல் போட்டு விட்டு விடுவாள் ... அப்போதைக்கு... மதியம் தூங்கக் கூடாது என்ற கண்டிஷனுடன் .. தலை வலிக்குமாம்; மண்டையில் நீர் கோர்த்துக் கொள்ளுமாம்..
சாயந்திரம் 3 ம் கல்யாணம். எண்ணெய் குளியல் அன்று தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது.. அப்படியே சிடுக்கு எடுத்து, இழைய வாரி பின்னி விடுவாள்.
அன்றைக்கே தேங்காய் எண்ணெய் தடவினால் மயிர் காய் கைக்குமாம் !!
நா பார்த்ததில்லை, என் தலையில் காயும், பழமும்.
இந்த மூன்று process இலும், அப்பா சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை தேய்க்கும்போது, வ"வலிக்கிறது" என்று ஒரு கூச்சல் (அப்பா காதில் விழும்படி); "அம்மா, இவ்வளவு சூடா தண்ணி விடாதேம்மா" அடுத்த கத்தல்...
அப்பா வெளியிலிருந்து, "சரசு, கொஞ்சம் வெது வெது என்று விடேன்" என்று கத்த, எனக்கு குஷியாயிடும்.
இத்தனை கலாட்டாவில், கண்ணில் சீயக்காய் பட்டு, சிவந்து, எரியும்.
அதுக்கு எல்லாரும் விசாரணை.. கரிசனத்துடன். அதற்கு மாற்று வைத்தியம், புடவையை சுருட்டி, வாயில் வைத்து ஊத்தி, சூடு பண்ணி , கண்ணில் ஒத்தடம்..
"இதெல்லாம் கடைசி வரைக்கும் பண்ணாமல் ஏம்மா என்னை  கல்யாணம் பண்ணி அனுப்பிச்ச..?? அழுகை அழுகையாக வரதும்மா. அப்போ அருமை தெரியல்லியே. இதிலே ஒரு வார்த்தை கூட கேட்க இப்போ யாருமில்லையே !!"
குழந்தை பிறந்தப்போ, இன்னும் கரிசனத்துடன் - மைனஸ் திட்டல் - எண்ணெய் தேய்த்து, நல்ல சாப்பாடு போட்டு, நான் தூங்காமல் பார்த்துக்கொண்டு... அந்த சுகத்துக்காக, இன்னும் இரண்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளலாம்... !!
ஹும்ம்ம்ம்ம்ம்ம் !!

No comments:

Post a Comment