Monday, June 1, 2020

வேர்களைத் தேடி... (1 )

வேர்களைத் தேடி... (1 )
சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகராஜ உற்சவத்திற்கு போனோம். இரண்டு நாள் தங்கியிருந்தால், ஒரு அரை நாள் , அம்மா பிறந்து, வாழ்ந்த கிராமத்திற்கு கிளம்பினோம்.
திருவையாறிலிருந்து மன்னார்குடி நோக்கி பயணம்... டாக்ஸி யில்... என் அம்மா பிறந்து வளர்ந்த ஊரான "மூர்த்தியம்பாள் புறம் "நோக்கி. சுமார் 65 வருஷங்கள் கழித்து. மனசில் ஒரு கலவையான உணர்வுகளுடன்.
வழியிலேயே மூர்த்தியம்பாள்புறம் " என்ற போர்ட் ஐ பார்த்ததும், உடம்பு சிலிர்த்தது உண்மை. ஒரே excitement .
அம்மா தன சிறு வயது life , ஐந்தாம் க்ளாஸ் வரை படித்தது, கல்யாணம் பண்ணியது (11 வயதில்), தன் குடும்பம், தாத்தா, அண்ணா, அக்கா என்று நிறைய கதைகள் சொல்லியிருந்ததால், மிராசுதார் தாத்தா, மாமா ஊரை பார்க்க ஒரே ஆவல். ஆனால் யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்களோ? சந்தேஹம்...
இப்படி பேசிக் கொண்டே , மெயின் ரோட்டிலிருந்து, ஊர் நோக்கி திரும்ப, கார் டிரைவருக்கும் தொத்திக் கொண்டது உற்சாகம்.
அக்கிரஹாரத்தைத் தேடிக் கொண்டு போனால், அங்கு இருந்தது மூணே வீடுகள். என்ன ஆச்சரியம்... அதில் இரண்டில் வயதானவர்கள், எங்கள் தாத்தா மாமா குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.
முதல் தம்பதி நரசிம்ஹர், லக்ஷ்மி. திண்ணை, மித்தம் என்று மூன்று கட்டு வீடு. அவர் 80 வருஷமாக அங்கு இருப்பதாக சொல்ல ஒரே சந்தோஷம். அவர்கள் குழந்தைகள் எல்லாம் வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆக, இவர்கள் இருவர் மட்டும் பூர்வீக வீட்டில், தனியாக.
அவர்களுக்கு என் தாத்தா கிருஷ்ணையர், மாமா கோதண்டராமய்யர், அம்மா சரஸ்வதி, மாமாவின் குழந்தைகள், இன்றைய தலைமுறை வரை தெரிந்து வைத்திருந்ததுமல்லாமல், அவர்களின் இன்றைய சந்ததி, பழைய கதைகள், நினைவு மாறாமல் சொல்ல, எல்லாம் எங்கம்மா சொன்னதுக்கு ஒத்துப்போக ... ஒரே சந்தோஷம்.
ஒரு சொம்பில் தீர்த்தம் குடுத்தார் அந்த மாமி. அது என்ன மினெரல் தண்ணீரா... இல்லை. சாதாரண தண்ணீர். அதுக்கு இவ்வளவு ருசியா? நாம் குடிக்கும் தண்ணீரில் என்ன ருசி இருக்கிறது? அந்த மன நிலையில், சொந்த மண்ணில் அது இன்னும் ருசியாகத் தெரிந்தது. நல்ல மனிதர்கள்.
மாமா வீட்டை, கோவில் குருக்கள் தோட்டமாக்கி இருந்தார், பெருமாள் சேவைக்கு மலர்களுக்காக. தாத்தா வீடு தரை மட்டம். அங்கு எப்படி எல்லாம் அம்மா வளர்ந்திருப்பார், அதே வீட்டில் கல்யாணம் நடந்திருக்கும், குழந்தைகள் பிறந்திருக்கும் என்று ஒவ்வொன்றாக நினைத்து பார்த்து .....
ஆசை தீர பேசினோம். போட்டோ எடுத்தோம்....

No comments:

Post a Comment