Saturday, June 20, 2020

மூக்குத்தியும் நானும் ......

என் முதல் மூக்குத்தி.....
எட்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எதுக்குத்தான் அந்த விபரீத ஆசை வந்ததோ தெரியல்ல. அம்மாவிடம் போய் , "எனக்கு மூக்கு குத்திக்கணும் " ன்னு கேட்டேன். அம்மாவுக்கு படு சுவாரசியம்.
என்னை வாகாக உக்காத்தி வெச்சு , வலது மூக்கில் பேனாவால் சரியான இடத்தில் ஒரு மார்க் வைத்து, அங்கு சொட்டு நல்லெண்ணெய் வைத்து, ஒரு புது ஊசியில் நூல் கோர்த்து , அந்த புள்ளி மேல் வைத்து , ஒரே அமுக்கு - ஊசி நூலை மறுபக்கம் எடுத்து, அந்த நூலை முடி போட்டு விட்டு விட்டாள் . வலி தாங்க முடியவில்லை.
வலிக்கு மருந்து - கிருஷ்ணா தியேட்டரில் குலேபகாவலி திரைப் படம் - இரண்டாம் முறை . தினமும் நல்லெண்ணெய் வைத்து, புண்ணை ஆற்றி , பிறகு நூலை கழற்றி, ஒரு சின்ன மூக்குத்தி.......
காலேஜ் போகும்போது எனக்கு மூக்குத்தி பிடிக்காததால் (fashion , fashion ) கழற்றிவிட , ஓட்டை துந்து போய் விட்டது.
இரண்டாம் தரம்...
கல்யாணத்திற்கு முன்னாடி எங்காத்தில் மூக்குத்தி அவசியம் என்று சொல்ல, இப்பவும் அம்மாதான்... அதே மார்க் இருந்ததால், கொஞ்சம் ஈஸியாக குத்திவிட்டாள் - அதே method - சினிமாவெல்லாம் கிடையாது. கல்யாணத்திற்குப்பிறகு வைர மூக்குத்தி வேறு !!!
ரொம்ப வருஷத்துக்கப்புறம்..... அதை கழற்றி விட, (fashion , fashion ) மறுபடியும் துந்து போய் விட்டது.
மூன்றாம் தரம்.....
சுமார் பத்து வருடங்கள் முன்பு, இப்போது, மூக்கு, காது குத்தி விடும் ஒரு பையனிடம் , என் பெண் அழைத்துப்போக, (இவரிடம், வைரத்தில் எட்டுக்கல் பேசரிக்கு டீல் போட்டுவிட்டு ) குத்திக் கொண்டேன். அவன் ஒரு சின்ன தங்க மூக்குத்தியை, கன் ஷாட் முறையில் குத்தி விட்டான். இன்றுவரை அதுதான்.
போன நவம்பரில், இடது மூக்கும் குத்திக் கொண்டால் என்ன என்ற விபரீத ஆசை, எனக்கும் என் சினேகிதி கீதாவுக்கு வர, இருவரும் தங்க மாளிகை போய் , அங்கு தட்டான் , ஒத்தை கல் மூக்குத்தியை , சுரையில் ஒரு தங்க கம்பி குடுத்து , பேனாவால் மார்க் பண்ணி, ஒரே அமுக்கு.... கண்ணில் தண்ணீர் கர கர வென்று... தேவையா? 10 நாட்கள் கழித்து , அதே தட்டான் அந்த ஒத்தை கல்லை கழற்றி, தளுக்கு (நான்கு கல் முத்து ) மாட்டி, போட்டு விட்டார்.
ஜென்ம சாபல்யம்.... இன்னும் கழற்ற வில்லை... !!!!!


No comments:

Post a Comment