Friday, July 31, 2020

சஞ்சுவுக்கு ஒரு பகிரங்க கடிதம்.......

(சஞ்சுவுக்கு ஒரு பகிரங்க கடிதம். )

சஞ்சு,
என் அருமை பேத்தியே...
உனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. ஆனாலும் நான் தமிழில்தான் எழுதுவேன். அப்போதுதான் ஆத்மார்த்தமாக இருக்கும்.
உன் 21ம் பிறந்தநாளை நீ கொண்டாடும் நேரம், உன்னை பற்றிய ஞாபகங்கள் மனதில் எத்தனை, எத்தனை.
நீ பிறக்கும்போது நான் ஸ்கூலில் வேலையில் இருந்தேன். உன் அம்மா என்னுடன் வந்து இருந்து, வேலைக்கும் போய் வந்தாள் . ஜூலை 30 அன்று கூட உன் அம்மா வேலையிலிருந்து சாயங்காலம் 7 மணிக்கு வந்தாள் . ஒரு வாரமாகவே, உன் வரவை எதிர்பார்த்து, ஒரு கூடையும், பையும் தயாராக... அதற்கு நானும் உன் அம்மாவும் எவ்வளவு ஷாப்பிங்.!! உனக்கு உடனே தேவை என்று தோன்றியதெல்லாம் வாங்கி சேர்த்தோம்.
ஜூலை 31 காலை 3 மணிக்கு, உன் அம்மா புவனாவுக்கு உடலில் வித்தியாசம் தெரிய, உன் தாத்தா, குற்றாலத்திற்கு பிக்னிக் போயிருக்க, உன் அப்பாவுக்கு போன் செய்து, வரவழைத்து, புவனாவை இசபெல் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன்...அந்த நேரம் எவ்வளவு anxiety . டாக்டர் காலை வந்து சேர்ந்து , சில நிமிடங்களிலேயே நீ பிறந்தாய். பெண் குழந்தை என்று நர்ஸ் கொண்டு காண்பித்தபோது, நான் அடைந்த சந்தோஷம் , இங்கு எழுதுவதற்கு அப்பாற்பட்டது.
அன்று சனிக்கிழமை. ஸ்கூலுக்கு லீவ் சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது நினைத்தாலும் நான் வருத்தப் படும் விஷயம் ஒன்று உண்டு. ஞாயிறு அன்று தாத்தா குற்றாலத்திலிருந்து வந்ததும்தான் விஷயம் அவருக்கு தெரியும் !! அப்போதெல்லாம் ஏது செல் போன். 3ம் நாள் திங்கள் கிழமை காலை புவனாவுக்கு டிஸ்சார்ஜ். நான் காலை சீக்கிரம் எழுந்து, சமையல், டிபன் செய்து, உன் அம்மாவுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, ஸ்கூல் போய் விட்டேன். ஏன் ஒரு மாதம் லீவ் எடுத்து வீட்டில் இருந்து உங்கள் இருவரையும் கவனிக்கவில்லை ? நான் செய்தது தப்புதான். மன்னித்து விடு....
ஞாபகங்கள் மிக அதிகம். நீண்ட கடிதம்... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு தொடர்கிறேன்.

சஞ்சு.......
தினமும் காலை உங்கள் இருவருக்கும் தேவையானதை எல்லாம் செய்து வைத்துவிட்டு, வென்னீர் பிளாஸ்க்கில் போட்டு வைத்து, ஹார்லிக்ஸ் , அதை கரைக்க டம்ளர், உனக்கு தேவையான துணிகள் எல்லாம் அம்மா படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு, நான் ஸ்கூலுக்கு போய் விடுவேன். உங்கம்மாவுக்கு கூப்பிட்ட குரலுக்கு உதவ ஒரு சின்ன பெண்ணை அமர்த்தியிருந்தேன்.
சரியாக 12 மணிக்கு அம்மா கெய்சர் போட்டு வைப்பாள். நான் ஸ்கூலிலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவேன். ஆட்டோ வாசலில் வெயிட்டிங் . நான் மேலே வந்து, உன்னை காலில் போட்டு குளிப்பாட்டி விட்டு, உங்கம்மா கையில் கொடுத்து விட்டு, அதே ஆட்டோவில் மறுபடியும் ஸ்கூல். மாலை 4 மணிக்கு வந்ததும் புவனாவுக்கு காபி கொடுத்துவிட்டு, உன்னை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். யார் கையிலும் தரமாட்டேன்.... உங்கம்மா கையில் கூட.
உன்னை மடியில் போட்டுக் கொண்டு , எனக்கு தெரிந்த பாட்டெல்லாம் பாடி, இங்கிலிஷ் ரைம்ஸ் எல்லாம் பாடி, ஒரு இரண்டு மணி நேரமாவது உன்னை கொஞ்சி விட்டுத் தான் எழுந்திருப்பேன்.
பதினோராம் நாள் உனக்கு குளிப்பாட்டி, புது ட்ரெஸ் போட்டு, புண்ணியாஜனம் செய்து, மாலை தொட்டில் போட்டு... என் ஸ்கூலிலிருந்து டீச்சரெல்லாம் வந்தார்கள். உங்கம்மா பஞ்சாங்கம் பார்த்து, முதல் எழுத்து "ச" வாக இருக்க வேண்டும் என்று பெயர் தேடி, நானும் என் பங்குக்கு "சஞ்சனா", "சரித்ரா" , "பவித்ரா" என்றெல்லாம் சொல்லி, சஞ்சனா ஓரளவுக்கு பிடிக்க, செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனால், அங்கே வந்திருந்த குழந்தைகளில், இன்னும் இரண்டு சஞ்சனா !!! அதனால் நீ சஞ்சுக்தா வானாய்.
சஞ்சு... இன்னும் நீ மூன்று மாதம் கூட தாண்ட வில்லை. இன்னும் நிறைய உன்னுடன் பேசவேண்டும்.

சஞ்சு -

சாயந்திரம் உங்கப்பா உன்னை பார்க்க வந்தால், நான் உன்னை தரமாட்டேன் - அதனால் உங்கம்மாவுடன் சண்டை கூட வந்திருக்கிறது...

இரவில், நடுவில் அடிக்கடி நீ முழித்துக் கொள்ள, புவனாவின் தூக்கம் கெட, நான் ராத்திரி உன்னை என் பக்கத்தில் போட்டுக் கொண்டு, நீ முழித்து அழும்போதெல்லாம் சமாளித்து பார்த்துக் கொள்வேன்.
நான் நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாட , அதன் வரிகளை அம்மா எழுதிக் கொண்டாள்  - உன்னை அவா வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போனப்புறம் பாடுவதற்கு....

அந்த வரிகள்...

"ஆராரோ... ஆரிரரோ....
ஆறடுச்சு நீ அழறே..
..
உன்னை அடிச்சாரை சொல்லி அழு...
ஆக்கினைகள் செய்து வைப்போம் ...
உன்னை தொட்டாரை சொல்லி அழு 
தோள் விலங்கு பூட்டி வைப்போம் ...

என் கண்ணே அழ வேண்டாம் 
என் கண்மணியை யாரடிச்சா...

உன்னை பாட்டி அடிச்சாளோ ..
பால் போட்டும் சங்காலே...
உன்னை அத்தை அடிச்சாளோ 
அரவணைக்கும் கையாலே...
உன்னை மாமன் அடிச்சானோ ..
மல்லிகைப்பூ செண்டாலே...
உன்னை சித்தி அடிச்சாளோ சின்ன சின்ன கையாலே....

சித்தடியே சித்தடியே 
இத்தனை நாள் இங்கிருந்தே...
ஜோதி மறஞ்சிருந்தேன் 
தோழன் வர காத்திருந்தேன் ..
நான் மாசி மறஞ்சிருந்தேன் ..
மாந்தோப்புக் குள்ளிருந்தேன்..
என் கண்ணே அழ வேண்டாம்..
கண்மணியை யாரடிச்சா 

ஆறிரண்டும் காவேரி ... 
அது நடுவே ஸ்ரீரங்கம்...
ஸ்ரீரங்கம் ஆடி... 
திருப்பாற் கடலாடி...
என் கண்ணே அழ வேண்டாம்..
கண்மணியை யாரடிச்சா 


இதை தவிர....
"பாப்பா பாப்பா கதை கேளு..." என்ற காக்கா , நரி கதை பாட்டு...
"அழாதே பாப்பா அழாதே...."
"சின்ன பாப்பா எந்தன் செல்ல பாப்பா...

இன்ன பிற பாட்டுக்கள்....

இப்போது நினைத்தாலும்.. அந்த ஹால்... அங்கு ஒரு ஊஞ்சல்... அந்த ஊஞ்சலை கழட்டி விட்டுத்தான் உனக்கு தொட்டில்... அதன் அருகில் உட்கார்ந்து உன்னை மடியில் வைத்து நான் பாட்டு... நினைத்தாலே இனிக்கும். 

இன்னும் சொல்கிறேன்...

சஞ்சு, 

உனக்கு மூன்று மாதம் ஆனதும் உன்னை அம்மாவுடன் கொண்டு விட்டது R.A.Puram, VII Street வீட்டில். அங்கு முதன் முதல் உனக்கு ஆப்பிள் வேகா வைத்து ஊட்டியது நன்றாக ஞாபகம் இருக்கிறது. இதை தவிர கேழ்வரகை அலசி, முளை கட்டி, காயவைத்து, அரைத்து கொடுத்தேன். அதில் அம்மா உனக்கு கஞ்சியோ, கூழோ செய்து ஊட்டினாள். நீ கொழு கொழு என்று வளர்ந்தாய் .  

பிறகு கோட்டூர் புறம் வீடு. அங்குதான் உன் ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்டது.

R.A.Puram , II Main Raod லிருந்து , கோட்டூர்புரம் கிட்டக்கத்தான். ஸ்கூலிலிருந்து வந்ததும் நடந்தே அந்த வீட்டிற்கு நான் வருவேன். சாயந்திரம் பூரா உன்னை வைத்துக் கொண்டிருந்து விட்டு, pram  ல்  வைத்து தள்ளி, வேடிக்கை காட்டி விட்டு, திரும்புவேன்.

உன் ஆகாரம் பற்றி சொல்லையே ஆகவேண்டும். 

என்னோட அப்பா, அம்மா எனக்கும் சரி, என் குழந்தைகளுக்கும் சரி பழைய நாளத்திய வழக்கப்படி  படி, உரை மருந்து, கோரோஜனை , விளக்கெண்ணெய் , அடிக்கடி கிரைப் வாட்டர் இதெல்லாம் கொடுத்ததே இல்லை. அதையே நானும் பின் பற்றி, உனக்கு இது ஒன்றும் நான் கொடுத்து படுத்தவில்லை. உங்கம்மாவுக்கும், பத்திய சாப்பாடு எல்லாம் கிடையாது. முதல் நாளிலிருந்து சாதாரண சாப்பாடுதான். - ஆனால் அதிகம் காரம், மசாலா இல்லாமல். 

உங்கம்மா குழந்தையாய் இருந்த போது, கொடுத்த டயட், மற்ற விவரங்கள் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன். அதையே பார்த்து, உனக்கும் டயட் கொஞ்சம் கொஞ்சமாக , புதிது புதிதாக, கொடுத்தோம். உங்கம்மா சமர்த்தாக சொன்ன பேச்சு கேட்டாள் . நீயும் நன்றாக வளர்ந்தாய் .

உனக்கு தலை நின்று, 5 மாதம் ஆனதும், நன்றாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாய்.  கோட்டூர்புரம் வீட்டு வாசலில் பால் பூத் ஒன்று இருக்கும். உன்னை தூக்கிக் கொண்டு, அங்கே நின்று, அங்கு இருக்கும் மாடு ஒன்றை தினமும் காண்பிக்க வேண்டும். "அம்மோவ்" என்று கத்தி வேறு உன்னை entertain பண்ண வேண்டும். அதை தவிர, நாய், பூனை , காக்கா இவைகளை தினமும்  காண்பிக்க வேண்டும்.    

இந்த interest என்னவோ உனக்கு இன்னும் தொடர்கிறது.

இப்படியே நீ அழகாக , chubby யாக வளர்கையில் , உனக்கு உங்கம்மா பருப்பு சாதம் , தயிர் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள் . 

நீ அடிக்கடி காயத்ரி அபார்ட்மென்டுக்கு வருவாய். என்னுடன் பொழுதை கழிப்பாய் . வீட்டிற்கு போக உன்னை காரில் ஏற்றியதும், ஒரு பெரிய  அழுகை - கொஞ்சம் பேசவும் வந்து , பாட்டி சொல்ல வந்ததும்... காரிலிருந்து, கையை நீட்டி, "பாட்டி......" என்று சொல்லி அழுவாய் - என்னிடம் வர வேண்டும் என்று. உங்காத்துக்குப் போய் கூட உன் அழுகை தொடரும் என்று அம்மா சொல்வாள். சில நாட்கள், உன் அழுகை பொறுக்காமல், உன்னை கொண்டு வந்து விட்டிருக்கிறாள்...

இந்த அழுகை நீ வளர வளரவும் தொடர்ந்தது. உனக்கு சுமார் மூன்றரை வயது இருக்கும்போது, நானும் தாத்தாவும் காசிக்கு கிளம்பினோம். நீ அம்மாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தாய். ரயிலில் ஏறிக்  கொண்டு, "நானும் வருவேன்" என்று ஒரே அழுகை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தோம். "உனக்கு ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வில்லை" என்று சொன்னால், அம்மாவை "நீ போய் எடுத்துண்டு வா" என்கிறாய் . அதற்கு நேரமில்லை என்று சொன்னால் "ஊருக்குப் போய் புதுசு வாங்கி கொள்ளலாம் " என்கிறாய். அந்த ஸீன் இன்னும் என் கண் முன்னால் .
இதே போல் - உனக்கு சுமார் 8 வயதான பொது, நானும் தாத்தாவும் அண்டார்டிகா ட்ரிப் போக கிளம்பினோம். முதல் நாள் மாலை , நாங்கள் கிளம்பப் போகிறோம் என்று புரிந்ததும், நீ ஒரே அழுகை. "It is not fair" என்று சொல்லி நீ அழுதது என் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

மூன்றாம் முறை நீ இப்படி அழுதது.... நாங்கள் வேளாசேரியில் 7 வது மாடியில் (நீங்கள் 8 வது ) 3 வருடங்கள் குடி இருந்து விட்டு, ஆள்வார்பேட்டையில் வீடு பார்த்து ஷிஃப்ட் பண்ண, ஷிஃப்ட்டிங் க்கு முதல் நாள் மாலை ஓயாது அழுகை. அன்று இரவு என்னுடன் தங்கி, நீ அழ, நான் அழ... ஒரே ரகளை. அப்போது உனக்கு  9 வயது.  

மறுபடியும் நான் உனக்கு சாதம் ஊட்டிய கதைக்கு வருவோம்.....
அதாவது உன்னுடன் நாய், பூனை எல்லாம் சாப்பிட்டது. 

உனக்கு 9,10 மாதங்கள் இருக்கையில், பருப்பு சாதம் அல்லது  ரசம் சாதம், தயிர் சாதம் ஊட்ட வேண்டும். ஆர்.ஏ.புரத்தில்  இரண்டாவது மாடியில் வீடு. உன்ன இடுப்பில் தூக்கிக் கொண்டு, சாதத்தை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, இரண்டு மாடி இறங்கி கீழே போய் , முதலில் நாய் தேட வேண்டும். நாய்க்கு ஒரு வாய், உனக்கு ஒரு வாய்.  அப்படி ஊட்டினால்தான் சாப்பிடுவதை. அதை முடித்துவிட்டு, மறுபடியும் மாடி ஏறி, தயிர் சாதம் , கொஞ்சம் அதிகமாகவே, பூனைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு மறுபடியும் கீழே. பழக்கத்தில் பூனை வரும். அதற்கு ஒரு வாய், உனக்கு ஒரு வாய். பூனை வரவில்லை என்றால் தொலைந்தது. 

சாயந்திரம் ஆனால், தாத்தா உன்னை தூக்கிக் கொண்டு கேட் அருகில் நிற்பார். அந்த தெருவில் போகும் பலர் உன்னை பார்த்து கொஞ்சிவிட்டு போவார்கள். அதில் தாத்தாக்கு மஹா பெருமை. 

நீ  நடக்க ஆரம்பிக்குமுன் நன்றாக தவழுகிற ஸ்டேஜில், ஒரு நாள் கீழே, வாசலில், யாரோ சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டது. ஹாலில் எங்கேயோ இருந்த நீ, அவசர அவசரமாக தவழ்ந்து, வாசல் கதவை தாண்டி ஓடினாய், வேடிக்கை பார்க்க. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். 

2000 வருடம், மணிரத்தினத்தின் "அலை பாயுதே" சினிமா வந்தது. அதில் "காதல்  சடுகுடு குடு " என்று ஒரு பாட்டு. உனக்கு 1 1/2 வயது இருக்கும். உன்னை தூக்கிக் கொண்டு நான் டான்ஸ் ஆட வேண்டும் என்று படுத்துவாய் . அலுக்காமல் நானும் உன்னை தூக்கிக்கொண்டு ஆடுவேன். அப்போது அந்த பாட்டை பாடவேண்டும். நான் ஆட்டத்தை நிறுத்தி உன்னை இறங்கிவிட்டால், என்னை இழுத்து, உன் மழலையில் "காதல் சடுகுடு..." என்று சொல்வாய். . உடனே நான் தூக்கிக்கொண்டு ஆடுவேன். 

இப்படியே அழகாக வளர்ந்து, உனக்கு இரண்டரை வயதான போது , R.A.Puram, I Main Road ல்  Bambino ஸ்கூலில் சேர்த்தாள் உங்கம்மா. 


சஞ்சு....
நீ பிறந்த பிறகு, உங்கம்மாவுக்கு 3 மாதங்கள் maternity லீவ் கிடைத்தது... அதற்குப்பிறகு சில மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி. ஆனால் அது ரொம்ப நாள் நீடிக்க வில்லை. ஆபீஸுக்கு வர சொல்லிவிட்டார்கள். ஆபீஸ் அண்ணா நகரில். காலை வீட்டு வேலைகளை முடித்து, உனக்கு தேவையானதை செய்த்து உன்னை கொண்டு வந்து என்னிடம் விட்டு விட்டு போவாள். 2001 மே மாதத்துடன் நான் retire ஆகிவிட்டதால், எனக்கு உன்னை பார்த்துக் கொள்வது சுலபமாயிற்று. நாள் முழுதும் என்னோடிருப்பாய்.
தாத்தாவும் நானும், அடுத்த தெருவில் இருந்த ஸ்கூலில் உன்னை கொண்டு விடுவோம். ஸ்கூல் 2 மணி நேரம் தான். முடிந்ததும், நாங்கள் இருவரும் ஸ்கூலிலிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருகையில், வழியில் சூர்யா கறிகாய் கடை இருந்தது. இப்போதும் இருக்கிறது. அங்கே ஒரு சின்ன இடத்தில் மணல் கொட்டி, ஊஞ்சல், ஸீஸா , சறுக்கு மரம் எல்லாம், குழந்தைகள் விளையாட போட்டிருக்கும். அங்கே கொஞ்ச நேரம் உன்னை விளையாட விட்டு, திரும்பும்போது உனக்கு கட்டாயம் அந்த கடையில ஜெல்லி கலர் கலராக, இரண்டாவது வாங்கித்தர வேண்டும்.

சின்ன வயதில் உனக்கு கதை கேட்க ரொம்ப பிடிக்கும். பக்கத்தில் படுத்துக்க கொண்டு, நிறைய கதைகள் சொல்வேன். குட்டி, குட்டி சாமி கதைகள், ராமாயணம் என்று நிறைய கதைகள். "பாட்டி, ஏன் எல்லா கதையையும் , 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம்' என்றே ஆரம்பிக்கிறாய். ஒரே ஒரு ஊர்தான் இருக்குமா? " என்று கேட்பாய். வீட்டில் இருக்கும் magazine களிலிருந்து ஜோக்ஸ் சொல்ல வேண்டும். என்ன புரிந்ததோ !!! உனக்காக ஷக்தி விகடன் வாங்கி அதிலிருந்து கதைகள், "கல கல , கடைசி பக்கம்" எல்லாம் சொல்ல வேண்டும். நீயே பக்கங்களை புரட்டி, படக் கதை கேட்பாய். படம் இல்லாத கதைகள் உனக்கு பிடிக்காது.
ராமாயணம் கதை உன் மனதில் நன்கு பதிந்து விட்டது. சொன் னதையே தினமும் சொல்ல வேண்டும்.. கொஞ்சம் மாற்றினால், நீயே சரியாக எடுத்து குடுப்பாய் . !
கதை கேட்டு, கேட்டு, உனக்கு ராவணன் மேல் கோபம்.
நாங்கள் எல்லோரும் ராமேஸ்வரம் புறப்பட்டோம்... உனக்கு சுமார் மூன்று வயதிருக்கும்.
நீ முதலில், உன் விளையாட்டு வில் , அம்பு எடுத்து வைத்துக்கொண்டாய் .. ராவணனை அடிக்கவாம் !!
ஒரு பெல்ட் போட்டு, பின்னால் அம்பு சொருக ஒரு ஏற்பாடு பண்ணி, அதில் நாலு அம்புகளை சொருகி, ரயிலில் எடுத்து கீழே வைக்க மாட்டேன் என்று பிடிவாதம்...
ரயிலில் எல்லோரும் சிரிக்க, நீ "நான் ராவணனை அடிக்க போறேன்.. சிரிக்காதீங்கோ" என்று விளக்கம் வேறு.
ராமேஸ்வரம் போனதிலிருந்து, தனுஷ்கோடி போக வேண்டும் என்று ஒரே படுத்தல்..
தனுஷ்கோடி ஊர் வெள்ளத்தில் அழிந்து விட்டது தெரிந்திருக்கும் உங்களுக்கெல்லாம்.
தனுஷ் கோடி போனோம்...
"பாட்டி இலங்கை எந்த பக்கம் இருக்கு" ன்னு கேட்டாய் ..நானும் கடலை தாண்டி, அங்கே என்று கை காட்டினேன்...
உன் வில் அம்புகளை எடுத்து.. 3, 4 தரம்.விஷ்... விஷ்.என்று சத்தம் போட்டு, அடித்து திருப்தியாகி விட்டாய் ...
இதன் கிளைமாக்ஸ் ... ராமர் கோவிலுக்கு போனதும்..!
"ராமா, நான் ராவணனை வில்லால அடிச்சுட்டேன்; (கொல்லும் வார்த்தையை நான் சொல்லித்தரவில்லை ) அவன் பயந்துட்டான்; இனிமே சீதையை தூக்கிண்டு போக மாட்டான்" ன்னு ராமரோட பேச்சு வேறே

சஞ்சு,
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.
கோட்டூர்புரத்தில், ஒரு தாத்தா , ஒரு பூனை வளர்த்தார். நான் கோட்டூர் வரும்போதெல்லாம் உன்னை வாக் அழைச்சுண்டு போக்கரச்சே கண்டிப்பாக, முதலில் அந்த தாத்தா ஆத்துக்கு கூட்டிண்டு போகணும். அந்த பூனையை காமிக்கணும்.
கோட்டூர்புரத்தில் Kids Central என்ற ஸ்கூலுக்கு மாறினாய்.
உனக்கு சுமார் 3 வயதாகரச்சே , எப்படி கற்றுக் கொண்டாய் என்று தெரியவில்லை. ஆனால், தூரத்தில் ஒரு கார் வரும்போதே, அது என்ன மாடல் கார் என்று சொல்லி விடுவாய். amazing talent .
உங்கம்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கறச்சே, என்ன குழந்தை என்று தெரியாமல் இருக்கறச்சேயே, நீ, தம்பிப் பாப்பா என்று தீர்மானித்து, அதற்கு ரிஷி என்னும் பேரையும் வைத்துவிட்டாய். அம்மா ஹாஸ்பிடலில் உள்ளே இருக்கையில் , நர்ஸிடம் "ரிஷி பிறந்தாச்சா " என்று நீ கேட்க, அவர்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு,
ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி அன்று, உன் அம்மா பல தினுசு பக்ஷணங்கள் செய்தாள் . ஆனால் நீ "ஏன் கிருஷ்ணர் பாப்பாவுக்கு birth day கேக் வாங்கவில்லை" என்று கேட்டாய். உடனே ஒரு கேக் வாங்கி, டேபிளில் வைத்து, நீ கட் செய்ய , கிருஷ்ணருக்கு ஹாப்பி பர்த்டே கொண்டாடினோம்.
உனக்கு விளையாட்டு கீ போர்ட் வாங்கிக் கொடுத்தோம். அதை நான் பிடுங்கி, உனக்கு ரைம்ஸ் எல்லாம் வாசித்துக் காமிப்பேன். ஆனால், நீ பிடுங்கிக் கொள்வாய். என்னோட கீ போர்டை , நீ படுத்திய பாட்டில், நான் அதை விற்றே விட்டேன் !!!!
அப்புறமாக வேளச்சேரி. அங்கு நவதிஷா என்னும் ஸ்கூல்.
இப்படியே நீயும் வளர்ந்து . குதிரை ஏற்றம் எல்லாம் கற்றுக் கொண்டாய். ஒவ்வொரு கிளாசிலும் நன்றாக படித்தாய் ,
18 வயதில் கார் ஒட்டக், கற்று லைசென்ஸ் வாங்கி, இப்போ ஜோராக ஒட்டுகிறாய்.
17 வயதில் 12ம் கிளாஸ் முடித்ததும், US ல் கலிஃபோர்னியா வில் காலேஜ் சேர்ந்து, ஒரு வருடம் படித்து, அங்கு பிடிக்காமல் திரும்பி வந்து, டெல்லி அஷோகா யுனிவர்சிட்டி ல் சேர்ந்து படிக்கிறாய்.
இப்போது, எனக்கும் தாத்தாவுக்கும் போன், கம்பியூட்டர் இவைகளுக்கு technical அசிஸ்டண்ட் நீதான். அதில் எங்களுக்கு மகா பெருமை.
சஞ்சு, இன்னும் எவ்வளவோ ஞாபகங்கள். உன்னோடு செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியானவை. உனக்கு நீ குழந்தையாய் இருக்கும்போது நடந்தவைகள் நினைவுகளிலிருந்து அழிந்திருக்கலாம் - ஆனால் உணர்வுகளிலிருந்து அழிந்திருக்காது.
என்றைக்கும் நான் உன் செல்ல பாட்டிதான்... நீ என் செல்ல பேத்திதான்.
நீ இன்னும் நிறைய படித்து, வேலைக்கெல்லாம் போய் எங்களை எல்லாம் பெருமை படுத்துவாய் .
இன்னும் உன் வாழ்க்கையில் அநேக நல்லதுகள்
நடக்க வேண்டும். அதற்கு என் மனம் நிறைந்த ஆசிகள்.
நன்றாக இரு; சந்தோஷமாக இரு; அப்பா, அம்மாவை பெருமை படுத்து.
இப்படிக்கு,
உன் பாசமுள்ள பாட்டி.





1 comment:

  1. அருமை மிக மிக அருமை.
    நீங்கள் இப்போதும் ஆழ்வார்பேட்டையில் இருக்கிறீர்களா.

    எங்கள் வீடு லஸ்சர்ச் ரோடில் இருக்கிறது.
    எதிர் பக்கம் பாலம் சில்க்ஸ் கடை.

    ReplyDelete