Tuesday, July 7, 2020

5 நாள் கல்யாணம் - விபரங்கள்

5 நாள் கல்யாணம் - விபரங்கள் 
நாள் - 1 - மாலை மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம். கோயிலுக்குப் போய் , பையனுக்கு புது ட்ரெஸ் கொடுத்து (அந்த நாள்ல கோட், சூட் எல்லாம் கிடையாது) , மோதிரம் போட்டு, எல்லோருக்கும் சந்தனம் , குங்குமம் கொடுத்து, மாப்பிள்ளையை காரில் ஏற்றி உட்கார வைத்து, எல்லா முக்கிய வீதிகளிலும் ஊர்வலம் போகும்.
பிறகு, நிச்சயதார்த்தம். அதற்கு பெண் கிடையாது.
நாள் - 2 - காலை - அத்தை அப்பக்கூடை வைத்தல் ; பெண், பிள்ளைக்கு எண்ணெய் வைத்து குளிக்கச் சொல்லுதல்; விரதம்; எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு.
பிறகு, காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் - இவைகளெல்லாம் இப்பவும் உண்டு.
பிறகு, கல்யாணம். இப்போது போல்தான்.
ஆனால் மாங்கல்ய தாரணம் ஆனதும் , சப்தபதி; ஒளபாசனம் ; இந்த ஒளபாசனம் 5 நாட்களும் தொடரும்.
அந்த ஒளபாசன தீ அணையவே கூடாது. அந்த தம்பதிகள் வாழ்நாள் முழுவதும், அந்த தீ கனன்று கொண்டே இருக்கும்; தினமும் அந்த ஆண் காலையில் ஒளபாசனம் பண்ண வேண்டும் ; பெண் அந்த தீயை கொஞ்சம் எடுத்துதான் அடுப்பு பற்ற வைக்க வேண்டும்; கடைசியில் , அந்த ஆணுக்கு, இறப்பிற்குப் பின் அந்த தீயை எடுத்துக் கொண்டு, அந்த ஒளபாசன பானை கவிழ்க்கப் படும். எனக்கு தெரிந்து, தஞ்சையில், எங்கள் ஸ்கூல் சயன்ஸ் வாத்தியார் தினமும் செய்து நான் பார்த்திருக்கிறேன்.
மதியம் - நலங்கு; ஏகமாகப் பாட்டு; விளையாட்டு; பரிகாசங்கள் ; கும்மாளம் தான்.
மாலை பெண்ணும் , மாப்பிள்ளையும் காரில் ஊர்வலம்; எல்லார் வீட்டிலும் ஆரத்தி.

எங்கம்மா , அப்பாக்கு சாரட்டில் ஊர்வலம் - குதிரை பூட்டியது. வாண வேடிக்கை
பிறகு, மறுபடியும் ஒளபாசனம்.
அம்மி மிதித்தலும் , அருந்ததி பார்த்தலும் இரவு தான். ஏனென்றால், இரவுதான் நட்சத்திரம் தெரியும்.
நாள் - 3 - காலை ஊஞ்சல்; ஒளபாசனம். மாலை நலங்கு. - ஊர்வலம்.
நாள் - 4 - காலை ஊஞ்சல்; மாலை நலங்கு; ஊர்வலம் .
நாள் 5 - ஒளபாசனம் ; கட்டு சாதக் கூடையுடன், மாப்பிள்ளை வீட்டார் புறப் பட்டு விடுவார்கள்.
க்ரிஹப் பிரவேசம் என்பது, பிறகு, பெண் , மாமியார் வீட்டுக்கு போகும்போது தான்.
அம்மாவுக்கு கல்யாணத்தின் போது 11 வயதுதான் real கன்யா பெண் !
சுமார் 12 வயதில் பெரியவளானதும்... அது ஒரு பெரிய விசேஷம் !!
உடனே அப்பாவாத்துக்கு ஆள் போய், கல்கண்டு சர்க்கரையுடன் விஷயம் சொல்லப்பட்டது.
வாசலில் படிக்கோலம்; நிலையில் மாவிலை;
நாலு நாள் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு சுவீட்டுடன் அம்மாக்கு சாப்பாடு.
புறக்கடையில் உட்கார வைத்து, ஆத்து பெரியவர்கள் ஒருவர், தான் ஸ்நானம் செய்யும் முன்பு, அம்மாக்கு தலை பின்னி, பூ தைத்து, புடவை கட்டி அலங்காரம் பண்ணி ..
அங்கேயே உட்கார வைத்து விடுவார்களாம்.
விளையாட வீட்டோரத்து தோழிகள்... என்ன விளையாடுவார்கள்.. பல்லாங்குழி, ஏழு கல் இப்படி...
மூன்றாம் நாள் புட்டு பண்ணி, ஊர் முழுதும் விநியோகம்.
நாலாம் நாள் நன்றாக விடியும் முன்பு, இருட்டோடு, பெண்கள் அம்மாவை ஆற்றுக்கு அழைத்து போய், தலைக்கு எண்ணை தேய்த்து, மஞ்சள் பூசி குளிக்க வைத்து, நன்றாக விடிவதற்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.
ஐந்தாம் நாள் மறுபடியும் எண்ணை தேய்த்து குளித்ததும், புது புடவை கட்டி, அலங்காரம் பண்ணி, தெருவில், அழைத்து போவார்களாம்.
அந்த அக்ரஹாரத்தில் இருக்கும் எல்லா வீட்டிலும், அம்மாக்கு, சந்தன குங்குமம் இட்டு, ஆரத்தி எடுப்பாளாம்.
அதற்கு பிறகு நாள் பார்த்து, சம்பந்தி உத்தரவுடன், ஊருக்கு அழைத்து போவார்கள்.
அங்கே போனதும்...
க்ரிஹப் பிரவேசம்
சாயந்திரம் புது புடவை கட்டி, மணையில் உட்கார வைத்து ஏத்தி இறக்குவார்கள்.
அதாவது, சுமங்கலிகள் ஒவ்வொருவராக வந்து, சந்தனம், குங்குமம் இட்டு, படியில் (அரிசி அளக்கும் படி) நெல் வைத்துக்கொண்டு, முறத்தில் நெல் வைத்துக்கொண்டு) .. முறைப்படி, நெல் படியை அல்லது முறத்தை மேலும் கீழும் ஏத்தி, இறக்கி, தலையின் இரண்டு புறம், தோள், கை என்று இடிப்பார்கள் !!
ஆரத்தி எடுத்தவுடன் எல்லாம் முடிந்தது...
பிறகு நல்ல நாள் பார்த்து, சாயந்திரம் அப்பா, அம்மாவை மணையில் உட்கார வைத்து, சாஸ்த்ரிகள் வந்து, வைதீக காரியங்கள் முடித்து, வெள்ளி தட்டில் பால் சாதம் சாப்பிட்டு, அவர்கள் இல் வாழ்க்கை துவங்கியது !!
அம்மா சொல்லக் கேட்டது...

No comments:

Post a Comment