Monday, September 19, 2016

VK & Musical Instruments

நானும் , Music Instruments ம்

தௌ கீர்த்தனாரம்பத்திலே.....
8 thபடிக்கும்போதுன்னு ஞாபகம். அப்பாக்கு, எனக்கு வீணை 'சொல்லி வைக்கணும்' (இது தஞ்சாவூர் சொலவடை - 'எம்ப்ளது ' - 80 மாதிரி ) ன்னு ஆசை வர,சரஸ்வதி ன்னு ஒரு டீச்சரை வீட்டுக்கு வந்து சொல்லி வைக்க (மாசம் 5 ரூபாய்) ஏற்பாடு பண்ணி, தன் ஒரு மாச சம்பளத்தை போட்டு, ஒரு வீணையும், செய்யும் இடத்திலேயே போய் வாங்கி வந்தார். (அதுக்கு அம்மா கிட்ட வாங்க கட்டிண்டது இப்போ அவசியமில்லை. அப்பாக்கு பதில் சொல்ல தெரியலைன்னா, "சரசு, உள்ளே போ" ஒரே அதட்டல் தான்.
நிற்க ...எனக்கு வாய்ப்பாட்டின் ஆரம்பப்பாடங்கள், கீதம், ஸ்வரஜதி, கிருதி எல்லாம் ஓரளவு தெரியும் என்பதால், கொஞ்சம் சீக்கிரமே பாடம் ஆனது. இங்கே தான் problem மும் ஆரம்பித்தது.
அதாவது வாத்தியங்கள் பயித்தியம்.

நான் 9 வது படிக்கறச்சே, எங்கண்ணா , புல்புல்தாரா வாங்கி கொண்டு வந்து வாசிச்சு காண்பித்தான்.. உடனே, எனக்கும் ஆசை வர, தட்டி, கொட்டி, ஒரு ஹிந்தி பாட்டு, "சுன்,சுன்,சுன் , ஹரே பாபு சுன் - Howra Bridge " முதல் முதல் வெற்றிகரமாக வாசிச்சேன். (ஏன் ஹிந்தின்னு கேக்கறீங்களா.. நீங்க கேக்காட்டிலும் சொல்றேன்; ஹிந்தி பாட்டு வாசிப்பது கொஞ்சம் ஈசியாகவே இருக்கிறது)
என் வாசிப்பில் பூரித்து போன அண்ணா, அந்த type writer மாடல் புல் புல் எனக்கு குடுத்து விட்டுப் போனான்... (பொல்லாது; தான் கொஞ்சம் புதிய ஹார்மோனியம் மாடல் வாங்கிண்டான்)
அவ்வளவு தான்; எனக்கு தெரிஞ்ச, புரிஞ்ச பாட்டெல்லாம் practice பண்ண ஆரம்பிச்சேன். எனக்கும் ஒரு ரசிகர் கூட்டம் (தஞ்சாவூரில்).

வீட்டில் ஹார்மோனியம் எப்போதும் உண்டு. இப்போ ஒரு நம்பிக்கை வந்து, ஹார்மோனியத்தில், அப்பா இருக்கும்போது கர்நாடக சங்கீதம், அப்பா வெளியில் போனதும் சினிமா பாட்டுன்னு life interesting ஒடித்து. யாரும் என்னை, "ஏன் பாடம் படிக்காமல், இப்படி time வேஸ்ட் பண்ற" ன்னு கேக்காதது பெரிய ப்ளஸ் பாய்ன்ட் .
அப்பாக்கு கோட்டு வாத்தியமும் தெரியும்முதலில், இரண்டு தூண்களில் கம்பி கட்டி, அடியில் மரக்கட்டையை முட்டுக் கொடுத்து,Frequency கணக்கு போட்டு கட்டையை நகர்த்தி, distance between கட்டையை adjust பண்ணி , வாத்தியம் பண்ணி வாசிப்பா. வீணை வந்ததும், அதற்கு pegs வைத்து, தந்தியை உயர்த்தி கோ ட்டு வாத்தியமாக வாசிப்பா. வீணை டீச்சர் வந்ததும், என்னை திட்டி விட்டு, சுருதி சேர்ப்பா . இப்படியாக, கோ ட்டு வாத்தியம் வாசிச்சாச்சு.


காலேஜ் சேர்ந்ததும், புல்புல்தாரா தவிர மற்றவற்றிற்கு நேரமில்லை. ஆனால் Physics Lab ல் "Sonometer" வைத்துக்கொண்டு, வித்தை காமிச்சேன்...




ஒரு முறை QMC க்கு குமாரி கமலா டான்ஸ் ஆட வந்தார்கள். தம்புரா போட ஆள் இல்லை. உடனே அடித்தது சான்ஸ் என்று மேடை ஏறி விட்டேன். எப்படி போட வேண்டுமென்று எனக்கு சொல்லி தரப்பு பட, அதையும் செய்து விட்டேன்.

அப்புறம் என்ன,  கல்யாணம் .. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி... இல்லை இல்லை .. கமா. ஆனால் வீணை, புல்புல்தாரா எல்லாம் கொண்டு வரப்பட்டது எல்லாம் துணி போட்டு மூடி தூங்கியது. காலம் வேகமாக நகர்ந்தது.... (இதெல்லாம் கதைக்கு பில்ட் அப் கொடுக்க )

என் பையன் 5 thபடிக்கும்போது, அவனுக்கு டீச்சர் ஏற்பாடு பண்ணி முறையாக கத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். இன்னொரு வீணையும் வாங்கினேன். ஏதோ அவன் புண்ணியத்தில் , நானும் கொஞ்சம் தட்டினேன் !!
அடுத்தது, என் பெண் 6 thபடிக்கும்போது வயலின். லால்குடியின் சிஸ்டர்; பிறகு லால்குடியின் தங்கை கணவர்; சாவித்திரி சத்திய மூர்த்தி, M S அனந்த ராமன் என்று தொடர்ந்தது...
எனக்கு கிடைத்தது.. ஒரு அறிய சான்ஸ்... அதை விடுவேனா... வயலினில் என் கை வரிசையை காட்ட ஆசைப் பட்டேன்... என் over confidence க்கு அது ஓர் செமத்தையான அடி. அது என்ன இனிமையான இசையாகவா வந்துது ? கற முற கற முற ன்னு பூனை அடித்தொண்டையில், கீச்சுன்னு கத்தர மாதிரி, ரம்பம் அறுக்கும் சத்தம் நமக்கு உடம்புக்குள் என்னமோ பண்ணுமே... அது மாதிரி... ஒரு வேளை எலிகள் இருந்திருந்தால், பயந்து ஓடியிருக்கும். பசங்களுக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை... அதை சீக்கிரமே கைவிட்டேன் !!

என் கடைசி son 4 thபடிக்கறச்சே, drums கேட்க, அது விலை அதிகமாக இருக்க, "drums க்கு அடிப்படை மிருதங்கம் என்று ஒரே போடாக போட்டு, மிருதங்கம் சொல்லி வைக்க ஆரம்பித்தேன்; அவனை விட எனக்கு ரொம்ப குஷி... எல்லோரும் போனது "தா, தை, தீம், தக் " என்று ஆரம்பப் பாடங்கள் சரியாக வாசிக்க ரொம்ப சந்தோஷமாக போய்விட்டது . ஆனால், பாடம் அதிகமாக ஆக , குழந்தையை போல் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக யார் கவலை பட்டா... நான் வாசிப்பது என்ன தாளம் என்று தெரியாமல், நானே ஆசை தீர தட்டுவேன். அவன் practice பண்ணும்போது "கணேஷ், நான் பாடுகிறேன்; நீ பக்க வாதியமாக வாசி" என்று சொல்ல, அவனும் பெருமையாக வாசிக்க, சில நிமிடங்களிலேயே, "அம்மா, உன் தாளமில்லாத பாட்டுக்கு சரியாக என்னால் adjust பண்ண முடியவில்லை என்று open ஆக comment பண்ண , நானும் விடாமல் பல நாட்கள் ட்ரை பண்ணி give up .

அவனுக்கு எதிர் மிருதங்கம், கடம் வேறு வாங்க வேண்டி இருக்க, "அய்யா, கடம் தட்டலாம் " என்று ஆசையாக, பானை உடையாமல், மெல்ல தட்டினேன்... சத்தம் எங்கே " வந்தாதானே. ஹும்ம்ம்... அதுவும் போச்சு.

அப்போ என் பெரியவன் , key board (சிங்கப்பூரிலிருந்து இவர் வங்கி வந்தார்-சின்னதாக)... அவனுக்கு ஒரு natural talent உம் , வீணை தெரிந்ததும் சேர்ந்து, நன்றாக வாசித்தான்... விடுவேனா சான்சை. அவன் ஸ்கூலுக்கு போனப்புறம், கீ போர்டும் கையுமாகவே இருப்பேன். சினிமா பாட்டெல்லாம் வாசிப்பேன்...
அவன் வேலைக்கு போனதும் பெரிய key board , stand உடன் வாங்கினான். எனக்குப் பொறுக்குமா ? SK வை நச்சரிக்க, ஒரு பிறந்த நாளைக்கு, 12000 ரூ போட்டு வாங்கிக் கொடுத்தார்; cycle மாதிரி, இதற்கும் stand க்கு தனி காசு ... இப்படி 15000 க்கு ஆயிடுத்து.கடைக்காரன் காசு கேக்காமல் குடுத்தது 2 striker தான். அதில் நல்ல கலராகப் (!) பொருக்கி எடுத்துக் கொண்டேன்... வாசிக்க ஆரம்பித்தேன்.. என் ஒரே ரசிகர் (out of compulsion SK மட்டும்தான் )...
அவரும், சித்த நாழியில் பொறுமை இழந்து போய் விடுவார்.. பின்ன, practice பண்றச்சே கொஞ்சம் தடுமாராதா?"இன்னும் என்னை என்ன செய்யப் .... " ... அந்த இன்னும் என்னை க்கு 4 trial . அப்புறம் தேவலாம்னு வாசிச்சேன்.. என் son வரும் வரை.
அவன் வந்து, ரிதம் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும், வாத்தியங்கள் சத்தத்தை எப்படி மாற்றணும் என்று சொல்லிக் குடுக்க தலையாலே தண்ணி குடிச்சான்... ஒரு ஸ்டேஜில் கை விட்டான். ஆனாலும் பாவம் " நன்னா இருக்கும்மா, கொஞ்சம் practice பண்ணு ; அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு பெங்களூருக்கு எஸ்கேப்



இதற்கு நடுவில், 1987 இல் , கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன் (அப்போ என் son sinclairகம்ப்யூட்டர் வைத்து அசத்தினான்... ) நான் NIIT யில் சேர்ந்து முறையாக (!!!) கற்றுக் கொண்டேன். BASIC language.ஸ்கூலில் டீச் பண்ணவும் ஆரம்பித்தேன்...
BASIC langக்கு ஒரு manual கொடுத்தான்..ஹய்யா... அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்... அதில் நம் , ரி, , , வுக்கு frequency யும், corresponding key யும் போட்டிருந்தான்... அவ்வளவு தான்; பிடித்தது வெறி program எழுத ஆரம்பித்தேன் ... நன்றாக வந்தது... (நாம சொல்றத தட்டாம கேக்கறது கம்ப்யூட்டர் ஒண்ணுதான்) ..
கொஞ்சம் கொஞ்சமாக develop பண்ணி...ஆரம்பப் படங்களான, சரளி, சண்டை, தாட்டு, வரிசைகள், அலங்காரம், கீதம் என்று, இரவும், பகலும் அதே வேலை..
இரண்டு வர்ணங்கள்--- ஆரபி, வசந்தா... ஸ்வரங்கள் தெரிந்த தெல்லாம் போட்டேன்... SUPERO SUPER ... அப்புறம் அதற்கு ஒரு MENU ... replay the same ?proceed to the next ? stop " என்று, ஒரே interactive program .... ஒரு enter தட்டி விட்டா, அது பாட்டுக்கும் பாடும்..
பிறகு, சினிமா பாட்டுக்களை புல் புல் தாராவில் வாசித்து சுரத்தை எழுதி வெச்சுண்டு, நிறைய போட்டேன்...
அதில் length of a note , கமகங்கள் என்று அசத்தி விட்டேன்.கடைசியாக போட்டது... "வெள்ளைப்புறா ஒன்று... கையில் வராமலே..." breakஇல்லாமல் continuous ஆக...
வீட்டில் போட்டுக் காண்பித்தேன்.... SK க்கு பெருமை பிடிபடவில்லை.உடனே சாமிகிட்ட நின்னு, "என்ன தவம் செய்தேனோ.." என்று பாடாத குறை.
ஆனால், LKG குழந்தைகளை படுத்தற மாதிரி, யாரு வந்தாலும், "வசந்தா, அந்த பாட்டை போட்டு காண்பி" என்று ஆரம்பித்து விடுவார்...
ஒரு மியூசிக் தெரிந்த friend வர, அவர் அசந்து போய், இன்று வரை என்னை பாக்கும்போதெல்லாம் SW பண்ணி விக்க சொல்லி படுத்தல்ஸ்
Languages மாற, மாற, அவைகளில் ப்ரோக்ராம் எழுதி, டீச் பண்ண வேண்டி இருக்க, dos இல்ருந்து windows க்கு மாற, BASIC obsolete ஆக, என் innovative மியூசிக் அங்கேயே நின்றுவிட்டது... (ஒரு 3 வருடத்தில்.)
ஆனால் அந்த friend மட்டும், amnesia வந்த மாதிரி , இப்போது வந்து விட்ட மாற்றங்களை மறந்து " computer மியூசிக் இப்போது எங்கே இருக்கிறது ?" என்று, 1990 லேயே நிக்கறார். LIONSகிளப் போனால், மைக் கில் வேறு என் சாதனைகளை பட்டியலிடுவார்; எனக்கு மனசு திக் திக் என்று இருக்கும். ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பேன்; அதற்காகவே இப்போதெல்லாம் போறதில்லை.
இவர் தான் , என்னுடைய key board விலைக்கு வாங்கிக் கொண்டு போனார்... "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்னு"... ஏன் விற்றேன்? அது நிறைய இடத்தை அடைத்துக் கொண்டு, பேத்தி கையில் படாத பாடு பட்டுது. SK யும், "இவ்வளவு விலை போட்டு வாங்கிக் கொடுத்தேன்; வாசிக்கவே மாட்டேங்கரையே?" ன்னு படுத்த ஆரம்பிச்சுட்டார்.

இப்போ, இன்னும் கொஞ்சம் பின்னால்.....
என் அக்கா பெண் கல்யாணம் ... நம் வீட்டு கல்யாணத்தில் நமக்கு இல்லாத உரிமையா? முஹூர்த்தம் முடிந்து, மேளக்காரன் உரையை போட்டு மூடப் பார்க்கையில், பாய்ந்தேன்..

"என் பையன் (8 வயது இருக்கும்) நன்றாக மிருதங்கம் வாசிப்பான்; கொஞ்சம் அந்த தவிலை குடுங்களேன் என்று சொல்லவும், வேற வழி இல்லாமல், குடுக்க, சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே வாசிச்சான்... எனக்கு ஆசையாக இருக்காதா.. "நானும் கொஞ்சம்" என்று இழுத்தேன். அவனுக்கு என் மேல் நம்பிக்கை வந்து விட்டது; நான்தான் என் son க்கு ஆசான் ன்னு நினைத்து, என் கையில் கட்டையை குடுக்க, நான் சிவாஜி (மிருதங்க சக்ரவர்த்தி) பாவனையில், இரண்டயு தட்டு தட்ட, அரண்டு விட்டான்...

நாதஸ்வர காரரை, சில பல கேள்விகள் கேட்டு, மஸ்கா அடித்து, கையில் எடுத்தால், தூக்கவே முடியவில்லை. இருந்தாலும் தம் கட்டி, "பி,பி,பி" என்று ஊத, தூங்கிண்டிருந்தவா எல்லாம் "என்னவோ ஏதோ..." ன்னு ஓடி வர, நான் அந்த சீனை விட்டு எஸ்.வி.சேகர் மாதிரி, டபக் என்று escape

என் அத்திம்பேரில் ரெண்டு பேர் flute நன்றாக வாசிப்பார்கள்; சின்ன அத்திம்பேர் மாலியின் சிஷ்யர்; எனக்கு குஷி பிறந்து விட்டது. அத்திம்பேர் எல்லாம் wife sister மேல் தனி பாசம் வைப்பா..(உடனே, சினிமாத்தனமா கற்பனை பண்ண வேண்டாம்)...
அன்றிலிருந்து (இரண்டு நாட்கள்) புல்லாங்குழல் என் கையில் படாத பாடு..அசுர சாதகம்... ஊதினால் காத்துதாங்க வருது. சத்தமே இல்லை; கொஞ்சம் சத்தம் வந்ததும், எங்காத்து அடுப்பூதும், குழல், விளையாட்டு ஊதல் மாதிரி சத்தம். அந்த holes மூடி, திறந்து, பாதி மூடி, ஒரு சரளி வரிசை கூட வாசிக்க வரவில்லை... பெரிய ஏமாற்றத்தோடு திருப்பிக் குடுத்து விட்டேன்; ரொம்ப குறை

திருவிழா சமயத்தில் ஊதல் விக்கறவன், அனாயசமாக பாட்டு வாசிப்பான்; உடனே நம்பிக்கை வந்து, அதை நாலணா குடுத்து வாங்கி, பாவனை எல்லாம் நன்றாக இருக்கும்; சத்தமும் வரும்; மனதில் பாட்டு ஓடும்; வெளியே, ஒரே மாதிரி சத்தம் தான் கேக்கும்; ஆனால், நான் நன்றாக வாசிப்பது போல் எனக்கே தோன்றும்... மனதில் தான் பாட்டு இருக்கே? வாயில் ஊதலை வைத்துக் கொண்டு, தொண்டையிலிருந்து ஹம்மிங் பண்ணுவேன்; என்னால் அதுதான் முடியும்...

இது வரை stringed , percussion , wind எல்லாம் வாசித்தாகி விட்டது...
இன்னும் பின்னால் போனால்.... நாரதர் கை வீணை மாதிரி, தெருவில் பிக்ஷை எடுப்பவன், கையில் அதை வைத்துக் கொண்டு "ராம ஜோசியம், ராம ஜோசியம்" ன்னு தட்டினே போவான்; எனக்கு அந்த instrument மேல் ஆசை வர... "ढो आंकें बाऱा हाथ " சாந்தாராம் சினிமாவில், சந்த்யா , இதைத்தான் தெருவில் வியாபாரம் செய்வாள்.
ஒரு நாள் வாசலில் விற்றுக் கொண்டு போனவனிடம், அதை வாங்கினேன். அவன் சில பாடல்களை கத்துக்கொண்டு, என்னமாய் வாசிக்கறான்? எனக்கு தான் வீணை தெரியுமே... (அதனால் வந்த வினை தானே இதெல்லாம்) வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து, வில்லை தந்தியில் வைத்து இழுத்தால் ஒரே ஸ்வரம் வரத்து; நானும், விரலை, வேறு வேறு இடங்களில் வைத்து, வாசிச்சு பாத்து, மூன்றே நாளில், கை விட்டேன்.

அப்புறம் life இல் ஒரு பெரிய gap ... musicக்கு இடமில்லாமல்...
பெங்களூர் போனால், என் son பியானோ வைத்திருக்கிறான் !! திருட்டுக் கொட்டு, என்கிட்டே சொல்லவே இல்லை. நான் வரேன்னு தெரிஞ்சதும், பெரிய கவர் போட்டு மூடி விட்டான். விடுவேனா... அவன் office போனதும் பூந்து விளையாடி விடுவேன்... அது சித்த பரவா இல்லை.. என்ன.. பாட்டில் continuity இல்லாமல், தனித்தனியா ஸ்வரம் விழும். பரவா இல்லை. (QMC prayer ஹாலில் Piano உண்டு... free period இல், அதில் சினிமா பாட்டு வாசிக்க, என் friends ரசித்து கேட்க ,இது அந்த lecturer in charge க்கு தெரியும் வரை கொஞ்சம் ஒடித்து)
எனக்கு ரொம்ப ஆசை பரத நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.. நடக்கவில்லை... என் பெண்ணுக்கு (ஜெமினி கணேசனின் ??????? wife ) .. கிட்டக்கவே இருக்க, அவளிடம் சேர்த்து விட்டேன், சலங்கை பூஜை கூட முடிந்தது; அரங்கேற்றம் பண்ணலாமா என்பதற்குள், அவள் தேவ தாஸ் மாதிரி...... .... (புரிஞ்சிக்கணும்) இறந்து விட டான்ஸ் நின்றது.. ஆனால் எங்காத்தில் நிற்க விடுவேனா?
காலால், "தா, தீ, தை, நம்? என்று காலில் தாளம் போடும் முதல் பாடமே ஒரு வாரம் ஆகி (அப்பவும் வராமல்) ... காலை கவனித்தால், கை எங்கியோ போகிறது... கையை பார்த்தால், காலுக்கு தாளமே இல்லை... என் பெண் பொறுமை இழந்து... டான்ஸ் டீச்சர் வேலையே resign பண்ணி விட்டாள்
ஆனால், இன்றும் நான் "காலை தூக்கி நின்று...ஆடும் தெய்வமே என்னை.." என்று, நானே பாடி, நடராஜர் pose இல் நின்று ஆடிக்கொள் கிறேன்.. ஆனால் இப்போ கால் கொஞ்சம் வீக் ஆகி, நடுங்குவதால், நடராஜரே, குளிர் ஜுரம் வந்த மாதிரி நடுங்குகிறார்.
அப்புறம் என்ன.. நம்ம குத்துப் பாட்டுதான் இருக்கே... classical ன்னா ,ஓரளவு , நகராமலேயே, முகத்தில் ஏக பாவனை காட்டி ஆடுவேன்; சினிமா பாட்டென்றால் சுத்தி சுழன்று ஆடுவேன்...

குழந்தைகள் எல்லாம் "கூட்டை விட்டு பறக்க " (ஆஹா , என்ன தமிழ் நடை... வசந்தா... கொன்னுட்ட..) வீட்டில் அடைந்து கிடந்தது, சிறகொடிந்த நானும், என் வாத்தியங்களும்...
அவைகளை சரஸ்வதி பூஜைக்கு துடைத்து வைக்க கூட போர் அடித்தது...
வீணையை பெங்களூரு, வயலினை வேளா சேரி, ஒரு மிருதங்கம் அமேரிக்கா என்று அனுப்பி விட்டு, மற்றொரு மிருதங்கம், கடம் (வீட்டு வேலை செய்பவள் "அம்மா, அந்த பானையை எனக்கு குடுங்க , தண்ணி வைக்கங்கரா !!!) ஸ்ருதி பாக்ஸ் (இரண்டு... manual , electronic ) ஒன்றை வேளா சேரி பார்சல்.... மிச்ச தட்டு முட்டு வாட்த்யங்கள் எதிர் வீணை எல்லாம் தானம் !!! இத்துடன் என் வாத்ய வாசிப்புகள், ஒரு முடிவுக்கு வர... சோகமான நான்...

அய்யா... பேத்தி பிறந்ததும், அவளுக்கு 2 வயதில் ஒரு நீளமான instrument (பேர் தெரியவில்லை - may be xylaphone type), ஒரு குச்சி... விளையாட்டு சாமான்... வாங்கிக் கொடுத்து விட்டு...
"பாட்டிதானே வாங்கிக் கொடுத்தேன்.. எனக்கு கொஞ்சம் குடு" ன்னு பிடுங்கி, Rhymes வாசித்து காட்டறேன் என்று, (அதெல்லாம் ரொம்ப ஈசி..) அவளை அழ விட்டு...
"பாட்டி, நீ வசிக்க வேண்டாம், எனக்கே தெரியும் - உனக்கு ஒண்ணும் தெரியல்லே... " என்று நாக்கு மேல பல்லை போட்டு, பேத்தியால் தான் பாட்டியை திட்ட முடியும்...
ஹும்ம்... இப்போ யார் வீட்டுக்கு போனாலும் (குழந்தைகள்) அவா instrument களை , அவசரமாக ஒளித்து வைக்கிறார்கள்.

அந்த "கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை"
என்ன, இப்ப நீங்க யாராவது வந்தால் வாசித்துக் காட்ட ஒன்றும் இல்லை... என் வாயை தவிர (விசில் அடிக்க) !!
இத்துடன், என் "மிகச்சிறிய கட்டுரையை" முடித்துக் கொள்கிறேன் !!
எனக்கு யாராவது ஒரு சபாவில் வைத்து, "சகல கலா கொல்லி " (சீ சீ - வல்லி ) என்று பட்டம் வாங்கித்தாங்களேன்.
அச்சச்சோ , கஞ்சிரா, சிப்பலா கட்டை , ஜிங் சக் (பஜனைக்கு அடிக்கிறது) எல்லாம் விட்டுப் போயிடுத்தே. மறந்துட்டேன். 

.

1 comment: