Friday, June 5, 2020

தமிழ் சினிமா ஒரு அலசல்........


தமிழ் சினிமா    ஒரு அலசல்.......

தமிழில் முதல் படம் 'காளிதாஸ்' - 1931 - T. P. Rajalakshmi P. G. Venkatesan
தமிழ் சினிமா ஆரம்பித்த புதிதில், அதில் பாட்டு சேர்க்க வேண்டும் என்று யாருக்கு முதலில் ஐடியா தோன்றியது என்று தெரிய வில்லை.
அநேகமாக புராணக் கதைகள் தான். 40 பாட்டுக்களாவது இருக்கும் படத்தில்.
கதாநாயகி, கதாநாயகன் தான் பாடுவார்கள் ! (இன்னிவரைக்கும் அப்படித்தான்)
படங்கள் பாட்டுக்காகவே ஓடும். எல்லாம் கர்நாடக ராகங்கள். கச்சேரி மாதிரி, நிறைய சங்கதிகள், ஆலாபனை, ஸ்வரம் எல்லாம் சேர்த்து.
P.U.Chinnappa, M.K.T., S.G.Kittappa
இவர்கள் குரல் ரொம்ப பிரபலம்.G.N.B., M.S.S., N.C.V. கூட பாடி நடித்திருக்கிறார்கள்.
K.B.S.
இன் "ஒளவையாரை" மறக்க முடியுமா?
எல்லோரும் செந்தமிழில், மெதுவாக பேசுவார்கள். "நாதா" , "பிரபோ" , "ப்ரியசகி" இதெல்லாம் கணவன் மனைவி அழைத்துக்கொள்ளும் வார்த்தைகள்.
பெண் என்பவள் அடங்கித்தான் இருப்பாள்.
பிறகு சமூக கதைகள் எழுத ஆரம்பித்தார்கள். "பாவம் செய்பவன் அதன் பலனை அனுபவித்தே ஆகணும்" என்பது தான் கதைகளின் கருவாக இருக்கும்.
அப்போதெல்லாம் டப்பிங் தெரியாது. வசனம், பாட்டு எல்லாம் அப்படியே நேரிடையாக படமாக்கப் படும்.
ஒரு லக்ஷம் செலவழித்து படமெடுத்தால் ரொம்ப காஸ்ட்லி production .
அப்போ சினிமா ஸ்டூடியோ தேவையான ஒன்று என்பதால், பணமிருப்பவர்கள் சொந்த ஸ்டூடியோ கட்டினார்கள்.அப்படி கட்டியவை தான், Gemini, A.V.M, Bharani, Selem Modern Theaters Vijaya / Vahini etc.
வடபழனியில் ஸ்டூடியோ அதிகம் என்பதால், கோடம்பாக்கம் ஏரியா , சினிமா நடிகர்கள் குடியிருக்கும் பகுதியாக ஆயிற்று.
நின்றால், உட்கார்ந்தால் பாடல். மந்திரி குமாரியில் "உலவும் தென்றல் காற்றினிலே" என்று ஓடத்தில் பாடிவிட்டு, உடனே, மலை ஏறும்போது "வாராய், நீ வாராய்..." என்ற இரண்டு பாடல்கள்.
பாடல்களின் நடுவில் வசனம் வருவதும் சகஜம்.
"
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்... " .."இல்லை, கண்ணே சரிதானா என்று கேட்டேன்"
"அதிகாரமாக கேட்கக்கூடாது. குழந்தை கேக்குமே, 'அம்மா, லட்டு தா, மிட்டாய் தா ' என்று, அப்படி. எங்கே பாடு"
"சுவாமி... கண்ணே"
இப்படி !

சுதந்திரத்துக்கு முன், சில தேச பக்தி படங்கள் வந்தன. சில தடைகளும் செய்யப்பட்டன.
1945 க்கு மேல், ரஞ்சன், எம்.கே.ராதா, சஹஸ்ரநாமம் இவர்கள் அதிகம் பேசப்பட்டவர்கள். நாகையா, சஹஸ்ரநாமம் இவர்கள், அப்பா, அண்ணா ரோலுக்கு மாறி, கொஞ்சம் நிலைத்து இருந்தார்கள்.
அப்போ மேக் அப் ரொம்ப கிடையாது. பெண்கள், ரவிக்கை , குட்டை கையோடு, பஃப் வைத்திருக்கும். புடவை கட்டும், கண்டாங்கி சேலை, காட்டன் புடவை, நீள தலைப்பு, இழுத்து சொருகப்பட்டு...
ஆண்கள், வேஷ்டி - ரஞ்சன் போன்றவர்கள் pants போடுவார்கள் - நெற்றியில் விபூதி, குங்குமம் - ஜாதி அடையாளங்களுடன்...
ரஞ்சனும், வசுந்தரா தேவியும் (வைஜயந்திமாலாவுடைய அம்மா) நடித்த மங்கம்மா சபதம் (1943) - மறக்க முடியுமா- அதுவும் அந்த சபதத்தை - "நான் உன்னையே கல்யாணம் பண்ணிண்டு......" என்று போகும் சபதம். நான் கொஞ்சம் புரிந்த வயதில் பார்த்தேன்.
அந்த தமிழ் படங்களை இப்போ பார்த்தால், இந்தக் கால தமிழ் தெரிந்த குழந்தைகளுக்குக் கூட புரியாது ! (ஏன்னா, அது நல்ல தமிழ் !)
கதாநாயகிகளுக்கு நீள தலை முடி கண்டிப்பாக உண்டு (சவுரியாகத்தான் இருக்கும் - கண்ணாம்பா தவிர). நீளமாக பின்னி, ஒரு பக்கமாக, பின்னலை முன்னாள் போட்டுக்கொண்டால் கதா நாயகி ரொம்ப fashion . அதே சோகமான, கோபமான சீனில், சட்டென்று எப்படி பின்னல் அவிழும் என்று தெரியாது.. ஆனால் தலை முடி முதுகு நிறைய பறந்து, விரிந்து கிடக்கும்.
கதைப்படி கல்யாணம் ஆன, குழந்தை இருக்கிற பெண்கள் - பிச்சோடா, அதை சுற்றி மல்லிகைப் பூ !

1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"
குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்திமாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.
ரஞ்சனைப் போல் கத்தி சண்டை போட இன்னொருவர் பிறக்கவேண்டும். அவ்வளவு லாவகம், ஸ்டைல். அந்த costume மே அவ்வளவு நன்னா இருக்கும்.
அவருக்குப் பிறகு எம்.ஜி .ஆர் ஐ சொல்லலாம்.
ஒருவரே இரட்டை வேடம் போட்டது, முதலில், P.U.Chinnappa நடித்த "உத்தம புத்திரன்".படத்துக்காக (1940) .
உத்தம புத்திரன் படம் பிறகு சிவாஜி கணேசனை வைத்து எடுக்கப்பட்டது
நான் பார்த்த முதல் இரட்டையர் படம் "அபூர்வ சகோதரர்கள்" எம்.கே. ராதாஇரட்டைவேஷத்தில். அப்போ காமெரா technique எல்லாம் ரொம்ப கிடையாது. எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஒரே ஆச்சரியமாக இருக்கும். லென்சை அரை பாகம் மூடி, ஒரு ராதாவை எடுத்து விட்டு, மற்றொரு பக்கம் நிக்க வைத்து எடுப்பார்கள் என்று எங்கண்ணா சொன்னதை நம்புகிறேன் !
அந்த படம் போடு போடென்று போட்டது.
நடனம் என்றால், classical தான். குமாரி கமலா, வைஜயந்தி, லலிதா, பத்மினி, ராகினி, சாய்-சுப்புலட்சுமி இப்படி. அவர்களுக்கு நடிப்பு கிடையாது.வெறும் டான்ஸ் மட்டுமே. அப்புறமாக கமலா, லலிதா&சிஸ்டர்ஸ் , வைஜயந்தி நடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
நடனம் தெரியாத நடிகைகள், வெறும் கையை பாட்டின் வரிகளுக்கேற்ப அசைப்பார்கள். கண்ணை சுயட்டுவார்கள் அந்த வகையில், டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி பரவா இல்லை.
"செந்தாமரை மலரினை நீ கண்டதுண்டோடி.சிறிதேனும் என் முகத்திற்கு அது பொருத்தம் உண்டோடி" என்றால், கையில் தாமரை முத்திரை, முகம் என்றால், தன முகத்தை சுற்றி ஒரு வட்டம், கண்டதுண்டோ என்றால், இரு விரல்களால் கண்களுக்கிட்ட அபிநயம் - நாம கூட ஈசியா ஆடலாம்.
பானுமதி சொந்த குரலில் பாடினார். அந்த குரல் ஒரு தனித்தன்மை. ஈசியா கண்டு பிடிக்கலாம்.

அப்போதே பாட்டு டப்பிங் ஆரம்பித்து விட்டது.

1952 சிவாஜி கணேசனின் என்ட்ரி சினிமா போக்கையே 360 டிக்ரீ புரட்டிப்போட்டது.
நீள வசனங்கள், முகத்தில் ஏராளமான உணர்க்க்சிகளின் வெளிப்பாடு, (சிவாஜியின் முகத் தசை கூட நடிக்கும்) பாட்டிற்கு வாயசைக்கும் தன்மை ..
அப்போது இருந்த மூவர் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு நாயகிகளாக பத்மினி, சாவித்திரி, பானுமதி, சரோஜா தேவி, எஸ்.வரலக்ஷ்மி, ஜி.வரலக்ஷ்மி, மாதுரி தேவி, பி.எஸ்.சரோஜா,
வில்லன்களாக, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.கே.ராமச்சந்திரன், ஆர். எஸ்.மனோகர்....
காமெடிக்கு தங்கவேலு, டி.எஸ்.துரைராஜ், சந்திர பாபு, Kaka Radhakrishnan, எம்.ஜி.சக்ரபாணி, சாய்ராம், டி.எஸ்.பாலய்யா...
குணச் சித்திரத்துக்கு எஸ்.வி.சுப்பையா, நாகையா, S.V.Ranga Rao ;
தெலுங்கு ஹீரோக்களான என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ்.
என்.டி.ராம ராவ் - கிருஷ்ணர், ராமர் வேஷத்திற் கென்றே முக்கியமாக இருந்தவர்.
சிறந்த வில்லிகளாக இருந்தவர்கள், டி.ஆர்.ராஜ குமாரி, எம்.என்.ராஜம்,சில படங்களில் ராஜ சுலோச்சனா....
பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக வந்த பண்டரிபாய், திரும்பிப் பாரில் அவர் அக்காவாக..
சாவித்திரி, பெண்ணின் பெருமை படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக, பாச மலரில் தங்கையாக...
சித்தியில் பத்மினி எம்.ஆர்.ராதாவுக்கு இரண்டாம் தாரமாக, மங்கையர் திலகத்தில், சிவாஜியின் அண்ணியாக...
இப்படி பலதரப்பட்ட ரோல்களை, செய்தார்கள். மார்கெட் போய் விடும் என்ற கவலை இல்லை. அவர்களுக்கு நடிப்புதான் முக்கியம்.
சிவாஜி, எத்தனை நீளமான வசனமாக இருந்தாலும், ஒரு தரம் படிக்கக்கேட்டு, அப்படியே நடிப்பின் போது பேசிவிடுவாராம். சிவாஜி நடிகர் திலகம் என்றால் சாவித்திரி நடிகையர் திலகம்.
ஆனால், இவர்கள் யாருமே அகில இந்திய அளவில், நேஷனல் அவார்ட் வாங்கியதில்லை !
சிவாஜியின் படங்களில் என்னை மிகவும் பாதித்து அழ வைத்த படங்கள் - "எதிர்பாராதது"; "பாச மலர்" ; "கப்பலோட்டிய தமிழன்"; "கர்ணன்" .....
இன்னமும் நினைத்தாலே மனதை கனக்கச் செய்வது நாகேஸ்வர ராவ் , சாவித்ரி நடித்த "தேவதாஸ்" ; ஜெமினி , சரோஜா தேவியின் "கல்யாண பரிசு"

காமெடியில் கலக்கியவர்கள் முக்கியமாக , தங்கவேலு, நாகேஷ், மனோரமா ....
(சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன் .... இவர்களையும் சொல்லலாம். )
தங்கவேலு, எம்.சரோஜாவின் "கல்யாண பரிசு " ; தங்க வேலு , முத்துலட்சுமியின் "அறிவாளி" ; நாகேஷின் "காதலிக்க நேரமில்லை " இவைகளை மறக்க முடியுமா"


1960 களில், கே.ஆர்.விஜயா, மனோரமா, சோ, நாகேஷ், ஸ்ரீகாந்த், ஜெயலலிதா இவர்கள் பிரபலமனார்கள்
என்றைக்கும் தமிழ் ஹீரோயின் களுக்கு பஞ்சம் தான். அநேகம் பேர் தெலுங்கு - கொஞ்சம் கன்னடம், மலையாளம்.
நடனம் தெரிய வேண்டும், பாட்டு தெரிய வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் கிடையாது. தமிழ் நன்றாக பேச வேண்டும். அது எல்லோருமே நன்றாக கற்றுக் கொண்டு பேசினார்கள்.
நடிக, நடிகைகள் ஜிம் போவது, உடலை பெருக்காமல் ஒல்லியாக வைத்திருப்பது அதெல்லாம் தெரியாது. ஆனாலும் அவர்களை பார்க்கப் பிடிக்கும். ஏனென்றால் - நடிப்பு, குடும்பப் பாங்கான வேஷங்கள்; குடும்பக் கதைகள்.
இந்த பீரியட் , கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பீரியட்கள். Black & white movies.
முதல் முழு நீள கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். (நாடோடி மன்னனின் ஒரு பாகம் ) ..அப்போது கேவா கலர். பின்னர் டெக்னிக் கலராக மாறிற்று.
புரட்சிகரமாக, விதவை திருமணத்தைப் பற்றி பேசிய படம் "குல தெய்வம்" ,. பண்டரிபாயின் தங்கை மைனாவதி, கதாநாயகி. ராஜகோபால் "குலதெய்வம்" ராஜ கோபால் ஆனார்.
படங்கள் ப்ரொட்யூசர் பேரை வைத்து பிரபலப்படுத்தப் பட்டது.
Modern Theaters Sundaram, Padmini Pictures B.R.Bandhulu, A.V.M., National Talkies, Pakshi Raja Studios,.Gemini ..
இப்படி

மியூசிக் பத்தி சொல்லியே ஆகணும்.

முழு கர்னாடிக்  கிலிருந்து, கொஞ்சம் மாறியது.
கே.வி.மகாதேவன், ஜி. ராமநாதன்... இவர்கள் அதிகமாக கர்நாடக ராகங்களிலும், எம்.எஸ். விஸ்வநாதன் மெல்லிசையிலும்  மெட்டுப் போட்டார்கள்... அந்த இருபது வருடங்கள் பாடல்கள், மெட்டுக்காகவும், கண்ணதாசனின் வரிகளுக்காகவும்... மறக்கவே முடியாதவை. காலத்தால் அழியாதவை.

கண்ணதாசன் - விவரிக்க வார்த்தைகளே இல்லை. லவ்  சாங்க்ஸ், தத்துவம்... எத்தனை எத்தனை... தமிழ் காவியங்களில் இருந்து கூட வார்த்தைகளை எடுத்து, பிரமாதமாக பிரயோகம் பண்ணினார்.  இதற்குமேல்சொல்லத்தெரியவில்லை.

பாடல் வரிகளும் மெட்டும், கதைக்கு ஒன்றி இருந்ததாலும் , டி.எம்.எஸ். ஸ்பஷ்டமாக பாடியாதாலும், மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டவை.

ஏ.எம்.ராஜா, ஜிக்கி, சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, "குழந்தைக் குரல்" ராஜேஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ், ....
பாட்டைக் கேட்டால், நடிகர் யாரன்று சொல்லலாம். குரலை அப்படி மாற்றி பாடுவார்கள்.
Limited Number of Actors, Play Back singers, seasoned directors... திரும்பத் திரும்ப அவர்கள் படங்களே... ஆனால் அலுக்க வில்லை.

 இளையராஜா வுக்கு இணை இல்லை. ரெஹ்மான் மெட்டுக்கள் சூப்பர் ரகம். ஆனால் பாடல் வரிகள் இப்போதெல்லாம் மனதில் பதிவதில்லை. வயதானதாலோ ?

ஸ்ரீதர் முதலில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்., எதிர் பாராதது ,நால்வர் - இதெல்லாம் அவர் எழுதிய கதைகள்.
ஸ்ரீதர் கதையிலிருந்து direction க்கு மாறியது "கல்யாணப் பரிசு" படத்தில். அவரின் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை... எத்தனையோ... லிஸ்ட் பெரியது. ஒரு சீரியஸ், ஒரு காமெடி என்று மாற்றி மாற்றி எடுத்தார். (Camera-always – Wincent)
பிறகு வந்தவர் நம் பாலச்சந்தர். directionக்கு ஒரு புது trend உருவாக்கி, இன்றும் எல்லோராலும் "குரு" வாக மதிக்கப் படுபவர்.    பாரதிராஜாவும்.

அறுபதுகளில் மேக் அப் கொஞ்சம் ஓவர் தான்.

அப்பவும் அவுட்டோர்  அதிகமில்லை. ஸ்டூடியோ செட். தெருக்கள் கூட செட் தான். பார்த்தாலே தெரியும்.
மிஞ்சிப்போனால், பாட்டு எடுக்க சாத்தனூர் அணைக்கட்டு போவார்கள்.
தோட்டசெட்டில் எல்லாம் காகிதப் பூ. கலர் கலராக, கொடிகளில் தொங்கும். அதிக பட்ச டான்சாக, மரத்தை சுற்றி, கொடிகளை பற்றி ஓடுவார்கள்.

பாட்டு, வசனங்களில் இரட்டை அர்த்தம் இருக்காது. நிறைய விஷயங்களை suggestive ஆகவே சொல்வார்கள்.
புடவை தான் அநேகமாக. கதாநாயகிகள் வெறும் பொம்மைகளாக வந்து போகாமல், கதாநாயகனுக்கு ஈடு கொடுத்து நடித்தார்கள். என்ன, கொஞ்சம் பிழிய பிழிய அழுவார்கள்...

பணக்கஷ்டம், கல்யாணத்தில் பிரச்சினை, மாமியார் கொடுமை, கணவனின் சந்தேஹம், பணக்கார / ஏழை லவ், சந்தோஷமா ஒரு டூயட், பிரிவுக்கு அப்புறம் அதே பாடலை, வெவ்வேறு இடத்திலிருந்து....
சரோஜா தேவியின் கொஞ்சல் குரலும், "கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ" பாட்டும், லவ் பர்ட்ஸ் , லவ் பர்ட்ஸ் சின் அபிநயமும் (அபிநய சரஸ்வதி ஆயிற்றே) ... மறக்க முடியாதவை.

ஒரு தில்லானா மோகனாம்பாளுக்கு ஈடாகுமா... அந்த ரயில் சீன் எப்படி.. சிவாஜியும், பத்மினியும் இடத்தை மாற்றி மாற்றி...
பாரதி ராஜாவும், ஒரு கிராமீய மணத்துடன் படங்களை கொண்டுவர, சினிமா நன்றாகவே இருந்தது...
அப்போ எல்லாம் டைரக்டர்களுக்காக  படங்கள், நடிகர்களுக்காக படங்கள், பாட்டுக்காக என்று, ஆக மொத்தம் எல்லா படங்களும் பார்க்கப்படும்.

பிறகு ஒரு செட்டாக வந்தவர்கள் - பாக்யராஜ், மணி ரத்னம், பார்த்திபன், ஷங்கர், கே.எஸ்.ரவி குமார்..இப்படி...

லைட்டிங் குறைவாக, இருட்டில், ஒத்தை வரி வசனம் இப்படி எடுக்க ஆரம்பித்தவர் - மணி ரத்னம்.
பழைய சினிமாக்களில், ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவது என்பது குறைவுதான். அதான் முடிவில் எல்லாம் சுபம் ஆயிற்றே ! அதனால் கதாநாயகிகள் பொறுமையாக இருப்பார்கள்.
"ஓடிப்போலாமா ? " என்ற வசனம் , மணிரத்னம், இதயத்தை திருடாதே படத்தில் வைத்தாலும் வைத்தார், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் க்கு அதுவே தாரக மந்த்ரமாயிற்று.


கமல், ரஜினி அடுத்த சகாப்தம்... நிலைத்து நிற்பவர்கள்.

அதீதமான வில்லத் தனத்தையும் , ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்ட முடியும் என்று மாற்றிக் காட்டியவர் சத்யராஜ் . நூறாவது நாளும், "தகடு, தகடு" வசனமும் மறக்க முடியாதவை . பிறகு கதாநாயகனாகி, இன்று வரை, ஹீரோ, அப்பா வேஷம் எதுவானாலும், காமெடி கலந்து பண்ணும்  நல்ல நடிகர்.

சேரன் ஆரம்பித்து வைத்த  trend - யதார்த்தம்.
இப்போது அநேகமாக அவுட் டூர் ஷூட்டிங்கும், யதார்த்தமான கிராமமும், பணக்கார வெளி நாடுகளும் படமெடுக்கும் தளங்கள் ஆனதால், ஸ்டூடியோ வுக்கு வேலையில்லாமல், ஜெமினி, வாகினி எல்லாம் மறைந்து விட்டன. எ.வி.எம். மட்டும் இருக்கிறது.

1990 லிருந்து, technique / Camera (P.C.Sriram to be specially mentioned) , out door location, high budget, very many young & new artists, slim  heroines, hero maintaining good physique , singers என்று, சினிமா வேகமாக பயணிக்கிறது.



சினிமா என்பது ஒரு "கடல்"
அதில் "அலைகள் ஓய்வதில்லை"
அந்த அலைகள் என் "நெஞ்சிருக்கும் வரை" மோதிக் கொண்டிருக்கும்.
எல்லாவற்றையும் "மறக்க முடியுமா ?"
இன்னும் நிறைய "சொல்லத்தான் நினைக்கிறேன்"
சினிமாவிற்கு நான் ஒரு "ரசிகை"
என் மனதில் இருக்கும் "நீங்காத நினைவுகள்"

ஒரு "புத்தகம்" போடலாம்.... இல்லை - பல புத்தகங்கள்   போடலாம்....
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்...

வேர்களைத் தேடி.....2


என் அப்பாவின் ஊர் , சேத்தூர் ; காரைக்கால் அருகே (பேரளத்துக்கும் , காரைக்காலுக்கு நடுவே) ஒரு கிராமம்
நான் அதற்கு அருகிலிருக்கும் திருநள்ளாறுக்கு போகும்போது , பலமுறை, சேத்தூர் அக்ரஹாரத்துக்கு போயிருக்கிறேன்.
அந்த ஊரையும், அப்பா பிறந்த முருகஸ்தலமான, கந்தன்குடியையும் பார்க்க , நான் , என் மூன்று சிஸ்டர்ஸ் இரண்டு வருடங்கள் முன் கிளம்பினோம் . திடீரென்று பிளான் பண்ணி, இவரும் சேர்ந்து கொள்ள, காரில், விடியற்காலை 5 மணிக்கு புறப்பட்டோம். மாயவரம் போய் , அங்கிருந்து சேத்தூர் போவதாக பிளான்.
. எங்கே ஊருக்கு கிளம்பினாலும், அது கோவிலுக்கானாலும், திருப்பதியை ஆனாலும், முதல் பிளான், காலை டிபன் எங்கே , 11 மணிக்கு ஒரு டீ எங்கே, மத்திய லன்ச் எங்கே, மாலை காபி எங்கே, வழியில் பொழுது போகாமல் கொறிக்க என்ன என்பது தான் பெரிய பிளான். !!!!
அதன்படி பாண்டி போகும் வழியில் ஒரு ஹோட்டலில் காலை டிபன். நன்றாகவே வெட்டினோம் .
வழியில் வைத்தீஸ்வரன் கோவில் கோபுரம் தெரிய, அங்கு ஒரு சின்ன ஹால்ட். அவசரமாக, வைத்தீஸ்வரனுக்கு, தையல்நாயகிக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, மாயவரம் போய் சேர்ந்தோம். அங்கு முதலில் தேடிப்போனது காளியாக்குடி மெஸ். பசிக்கு, அருமையான சாப்பாடு. நாங்கள் பாய்ந்து பாய்ந்து , அந்த கோஸ் கறியும், கீரை மசியலும் சாப்பிட்டதை பார்த்து அந்த பரிமாறுபவன் என்ன நினைத்தானோ ! ஆனால் எங்களுக்கு அதெல்லாம் கவலை இல்லை.
பிறகு, புக் செய்திருந்த ஹோட்டலில் சாமான் போட்டுவிட்டு, உடனே கிளம்பினோம்.
ஒரு டாக்சி டிரைவர் அனாவசியமாக எங்களை குழப்பி, மூர்த்தியம்பாள்புரம் (மன்னார்குடிக்கு அருகில்) சுலபமாக போய் வந்துவிடலாம் என்று சொல்ல, நாங்களும் ரூட் மாத்தி, மூர்த்தியம்பாள்புரம் நோக்கி போக, அது நெவெர் எண்டிங் பிரயாணமாக தெரிய, பாதியில் அபௌட் டர்ன்.
இந்த குழப்பதினால் சேத்தூர் போய் சேர கொஞ்சம் நேரமாகிவிட்டது.
அங்கு அக்ரஹாரத்திற்கு போய், என் அப்பாவின் வீட்டை கண்டுபிடித்தோம்.
அப்பாவின் சேத்தூர் வீட்டில், என் அத்தை ஒருவர் குடி இருந்தார். அவரையும் தஞ்சாவூருக்கு கூட்டி வந்ததும், அப்பா அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். மாந்தோப்ப குத்தகைக்கு விட்டா... குத்தகைகாரன் சரியா பணம் தரல்லேன்னு, 1955 ல இருக்கும்னு நெனைக்கிறேன்... அந்த மாந்தோப்பவித்துட்டா... 800 ரூபாய்க்கு... அம்மா அதை அப்படியே பவுன் காசா மாத்திவெச்சுட்டா... பவுன் 40 ரூ ன்னு 20 பவுன் வந்துது.
வீடு மட்டும் வாடகைக்கு... 1980 கள்ல வாடகை 5 ரூ. அதுவும் ஒழுங்கா வராது...வீட்ட 5000 ரூ க்கு வித்துட்டா... எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க யாராவது அதஇன்னும் மேல குடுத்து வாங்கி இருப்போம்...
பெரிய அண்ணாக்கு ஒரே கோபம்...என்னாட்டமா எங்க எல்லாருக்கும் இந்த பழசெல்லாம்பசுமையான நினைவுகள்...
அண்ணா கேஸ் போடப்போறேன் ன்னு பய முறுத்தி, வாங்கினவா பயந்து போய் .. அப்புறம்நாங்க எல்லாரும்கையெழுத்து போட்டுக் குடுத்துட்டோம்...
நாங்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து போனால், எங்கள் அப்பாவிடம் வீட்டை வாங்கியவர், அதை மறுபடியும் யாருக்கோ விற்றுவிட்டார். அதனால் அங்கு இருப்பவர்களுக்கு, எங்கள் அப்பா, அண்ணா பற்றி எல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் போனதும், எங்களை அன்பாக வரவேற்று உள்ளே விட்டா. நாங்களும் ஆசை தீர, (எங்க அக்காவெல்லாம் சுமார் 75 வருடங்களுக்கு அப்புறம் சேத்தூர் பார்த்தார்கள். ) வீட்டு திண்ணை, மித்தம் , சமையல் ரூம், கொள்ளை பக்கம், அங்கு இன்னும் இருந்த பாக்கு, தென்னை மரங்கள், வேலி , கிணறு, வாய்க்கால் எல்லாம் பார்த்து பரவசம் ஆனோம். நாங்கள் உட்கார்ந்து, அத்தை தோசை வார்த்து போட சாப்பிட்ட இடம், சிவன் கோவில், எல்லாம் பார்த்து , பழைய கதைகளை பேசி சந்தோஷப பட்டோம். சிவன் கோவிலெல்லாம் பாழடைந்து இருக்கிறது. மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த தெருவில் கொஞ்சம் காலாற நடந்து, மேலாத்து குஞ்சலா என்ற அக்காவின் சிநேகிதி, ராஜகோபால் மாமா பற்றி எல்லாம் நினைவு கூர்ந்து, அக்கிரஹாரம் எல்லையில் இருக்கும் ஒரு அம்மன் கோவில் பார்த்து விட்டு, மனமே வராமல் அந்த ஊரை விட்டு வந்தோம்.
மறுபடியும் மாயவரம் வந்து, இரவு தங்கி, மறுநாள் விடியற்காலை கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம். மறக்க முடியாத ட்ரிப்.
என் பெரிய அக்காவுக்கு இன்னமும் குறை... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று... மறுபடியும் பிளான் பண்ணி, நாலு பெரும் சேர்ந்து போவோமா ? அந்த கடவுளுக்குத்தான் தெரியும். போகமுடிந்தால் சந்தோஷப் படுவோம்.




Tuesday, June 2, 2020

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. .

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. . அது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் புரி படாத மர்மம். யோசிக்க ஆரம்பித்தால், முடிவு, தெளிவு ஒன்றும் கிடைக்காது. குழப்பம் தான் மிஞ்சும். ஒவ்வொரு தடவை சிந்திக்கும் போதும், வெவேறு குழப்பங்கள் வரும். வெவேறு விளக்கம் வராது. நாம் மகான்கள் அல்ல. கடவுள் நமக்கு எவ்வளவு புரியணுமோ , அவ்வளவு ஞானம் தான் தந்திருக்கிறார்.

மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.

சில நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் ஆக்கும். அந்த நம்பிக்கையை பற்றுக் கோடாக பிடித்து, "நம்மை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான்; அவனை நன்றாக துதிப்பதற்கு" என்று மட்டும் தினமும் நினைத்து எது சந்தோஷம் கொடுக்கிறதோ, அதை செய்து, (இங்கு அந்த சந்தோஷம், பிறருக்கு தீமையாக  இல்லாமல்) "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று அனுபவியுங்கள். இயற்கையை பார்த்து வியந்து போய் , அதே போல், நியமம் தவறாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், முடிந்த உதவியை மனதார செய்து விட்டு, உங்கள் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் வேலையே முழு அர்ப்பணிப்புடன் செய்து, உடம்பை நன்றாக பார்த்துக் கொண்டு, சந்தோஷமாக இருங்கள்.

ignorance & innocence are some times blissful. மனம் குழந்தை மாதிரி குதூகலிக்கணும். பாரம் தெரியாது. நடப்பவை எல்லாம் நாராயணன் செயல்.

நமக்கும் சில, பல நல்ல அனுபவங்கள் தோன்றும்; கிடைக்கும்; இறைவன் யார் மூலமாவது காட்சி கொடுக்கிறான்; தன்னை உணர வைக்கிறான்;

அனாவசியமாக contemplate பண்ணுகிறேன், பேர்வழி" ன்னு குழம்பாதீங்க.

நாள் முழுவதும் , "ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே ; சஹஸ்ர  நாம தத்துல்யம் ராம நான வரானனே " என்று, மனதில் ஒட்டிக் கொண்டு, எது செய்தாலும் அதை திருந்தச் செய்து... ஒரு நாள் at a time வாழ்க்கையை அனுபவியுங்கள்.

நம்மை சுற்றி நடப்பவைகளை பார்த்து, கேட்டு, ரசிக்கக் கற்றுக் கொண்டாலே, வாழ்க்கை பாதி சுவாரசியமாக ஆகிவிடும்.

வடவம் முத்தி வைஷ்ணவம்..........


எங்க தாத்தா நாமம் (ஒற்றை) போட்டுக் கொள்வார். அதற்கு அம்மாவின் விளக்கம் "நாங்க எல்லாம் 'வடவம் முத்தி வைஷ்ணவம்' " ... ஏதோ இது ஒரு படி ஒஸ்தி மாதிரி.
இதன் ரகசியத்தை நரசிம்ஹன் மாமா விளக்கினார்.
மன்னார்குடி யில் அதிகமாக வைஷ்ணவர்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஐயங்கார்களுக்கு நிலம் வாங்குவது, பட்டா போடுவது சுலபம். இதனால் அய்யர்கள், நாமத்தை போட்டுக் கொண்டு, நிலம் வாங்கினார்களாம். அதை justify பண்ண, இப்படி "வடவம் முத்தி வைஷ்ணவம்" என்று சொல்லிக் கொண்டார்களாம். "புஸ்........." என்று ஒரு விஷயம் !!
அந்த கிராமமே எங்க தாத்தாவுக்கும், மாமாவுக்கும் சொந்தம். இவர்களைத் தவிர குடியானவர்கள் தான் அதிகம். எங்கும் பசுமை. எவ்வளவு நிலங்கள்.
தாத்தாவிடம் மட்டும் லைசென்ஸ் உடன் துப்பாக்கி.
மாமாவின் பூந்தோட்டத்தை கோவில் குருக்கள் (பெருமாள் கோவில் ) வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். மாமா இருந்த வீடு தரை மட்டம். அஸ்திவாரம் மட்டும் தெரிகிறது.

Monday, June 1, 2020

வேர்களைத் தேடி... (1 )

வேர்களைத் தேடி... (1 )
சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகராஜ உற்சவத்திற்கு போனோம். இரண்டு நாள் தங்கியிருந்தால், ஒரு அரை நாள் , அம்மா பிறந்து, வாழ்ந்த கிராமத்திற்கு கிளம்பினோம்.
திருவையாறிலிருந்து மன்னார்குடி நோக்கி பயணம்... டாக்ஸி யில்... என் அம்மா பிறந்து வளர்ந்த ஊரான "மூர்த்தியம்பாள் புறம் "நோக்கி. சுமார் 65 வருஷங்கள் கழித்து. மனசில் ஒரு கலவையான உணர்வுகளுடன்.
வழியிலேயே மூர்த்தியம்பாள்புறம் " என்ற போர்ட் ஐ பார்த்ததும், உடம்பு சிலிர்த்தது உண்மை. ஒரே excitement .
அம்மா தன சிறு வயது life , ஐந்தாம் க்ளாஸ் வரை படித்தது, கல்யாணம் பண்ணியது (11 வயதில்), தன் குடும்பம், தாத்தா, அண்ணா, அக்கா என்று நிறைய கதைகள் சொல்லியிருந்ததால், மிராசுதார் தாத்தா, மாமா ஊரை பார்க்க ஒரே ஆவல். ஆனால் யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்களோ? சந்தேஹம்...
இப்படி பேசிக் கொண்டே , மெயின் ரோட்டிலிருந்து, ஊர் நோக்கி திரும்ப, கார் டிரைவருக்கும் தொத்திக் கொண்டது உற்சாகம்.
அக்கிரஹாரத்தைத் தேடிக் கொண்டு போனால், அங்கு இருந்தது மூணே வீடுகள். என்ன ஆச்சரியம்... அதில் இரண்டில் வயதானவர்கள், எங்கள் தாத்தா மாமா குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.
முதல் தம்பதி நரசிம்ஹர், லக்ஷ்மி. திண்ணை, மித்தம் என்று மூன்று கட்டு வீடு. அவர் 80 வருஷமாக அங்கு இருப்பதாக சொல்ல ஒரே சந்தோஷம். அவர்கள் குழந்தைகள் எல்லாம் வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆக, இவர்கள் இருவர் மட்டும் பூர்வீக வீட்டில், தனியாக.
அவர்களுக்கு என் தாத்தா கிருஷ்ணையர், மாமா கோதண்டராமய்யர், அம்மா சரஸ்வதி, மாமாவின் குழந்தைகள், இன்றைய தலைமுறை வரை தெரிந்து வைத்திருந்ததுமல்லாமல், அவர்களின் இன்றைய சந்ததி, பழைய கதைகள், நினைவு மாறாமல் சொல்ல, எல்லாம் எங்கம்மா சொன்னதுக்கு ஒத்துப்போக ... ஒரே சந்தோஷம்.
ஒரு சொம்பில் தீர்த்தம் குடுத்தார் அந்த மாமி. அது என்ன மினெரல் தண்ணீரா... இல்லை. சாதாரண தண்ணீர். அதுக்கு இவ்வளவு ருசியா? நாம் குடிக்கும் தண்ணீரில் என்ன ருசி இருக்கிறது? அந்த மன நிலையில், சொந்த மண்ணில் அது இன்னும் ருசியாகத் தெரிந்தது. நல்ல மனிதர்கள்.
மாமா வீட்டை, கோவில் குருக்கள் தோட்டமாக்கி இருந்தார், பெருமாள் சேவைக்கு மலர்களுக்காக. தாத்தா வீடு தரை மட்டம். அங்கு எப்படி எல்லாம் அம்மா வளர்ந்திருப்பார், அதே வீட்டில் கல்யாணம் நடந்திருக்கும், குழந்தைகள் பிறந்திருக்கும் என்று ஒவ்வொன்றாக நினைத்து பார்த்து .....
ஆசை தீர பேசினோம். போட்டோ எடுத்தோம்....

Sunday, May 24, 2020

SK & Fruits

எங்க வீட்டில், எப்போதும் பழங்கள் வாங்குவது நான்தான்.
கொஞ்ச நாள் முன்பு, "நான் ரொம்ப வருஷம் இதெல்லாம் பண்ணியாச்சு. இனிமே நீங்க வாங்கிண்டு வாங்கோ" ன்னு இவர் கிட்ட சொல்ல, ஆரம்பிச்சுது வினை.
வாழைப்பழம் வாங்கிண்டு வரச்சொல்லி, "பச்சைப் பழம், பெரிசா" இருக்கும் ன்னு அடையாளம் சொல்லி, ஆறு பழம் வாங்கிண்டு வரச்சொன்னேன்.
வந்தது 12 பழம். "ஏன் இவ்வளவு?" ன்னா, "வண்டிக்காரன்தான் ஒரு சீப்பு எடுத்து, வாங்கிக்கச் சொன்னான்" ங்கறார்.
(உலகத்தில், என்னைத் தவிர யார் எது சொன்னாலும் கேக்கும் ஜாதி)
அதுதான் போகட்டும்னா,"பெரிய" பழத்துக்கு ஒரு அளவில்லை? ஒரு பழத்தை உரித்து, ஆளுக்கு பாதி சாப்பிட்டால், அன்று காலை டிபன் வேண்டியிருக்கவில்லை.
வயிறு ரொம்பிடுத்து. இந்த ரேட்டில 12 பழத்தை எப்படி முடிக்கிறது? குடு, பாதி, வேலை செய்பவளுக்கு !
அடுத்த முறை, பயந்துண்டு, சின்னதா, 6 பழம். மேலே கொஞ்சம் கருப்பு. "இதை ஏன் வாங்கி னேள். தோல் கருப்பா இருக்கே?" ன்னேன். "அந்த கடைக் காரன்தான் "மேலே அப்படித் தான் இருக்கும் சாமி. உள்ளே பளம் நல்லா இருக்கும்" ன்னான் ங்கறார் ! தூக்கி குடு, நாலு பழத்தை, வேலை செய்பவளுக்கு. (அவளே திகைத்து போனாள் நான் பழம் தரும் ரேட்டை பாத்து !)
மற்றொரு நாள் 1 டஜன் கொய்யாப் பழம் ! கூட இருந்த friend வாங்கினார்னு இவரும். இதுல விசேஷம் என்னன்னா , இவர் கொய்யாப் பழம் சாப்பிட மாட்டார். So , மிச்ச பழம் என்ன ஆகியிருக்கும் ? ன்னு ஊகிச்சிறுப் பேள் ! ஆனால் இந்த தடவை டிரைவருக்கு.
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. விலை அதிகம்னாலும், அப்பப்ப வாங்கலாம்னு சொல்லியிருக்க, ஒரு நாள் 6 ஆப்பிள் வந்தது. சிகப்பா, பள பளப்பா.... ஆசையா கட் பண்ணினா, உள்ளே ப்ரௌனா, கொஞ்சம் கொஞ்சம் கெட்டுப் போய் ! இரண்டு நறுக்கினால் தான் 4 துண்டுகளாவது தேறுகிறது. வெளியில பார்த்தால் தெரியாதுதான். ஒத்துக்கறேன். ஆனால், இந்த கடைக்காரனுக்கேல்லாம், இவர் முகத்தை பார்த்தோண எப்படி தெரிகிறது, இந்த பழங்களை இவரிடம் தள்ளலாம் என்று ?
இப்படித்தான் ஒரு நாள், நான் சொல்லாமலே, சுமார் 10 விளாம்பழம் வாங்கிண்டு வந்தார்.
நாங்கள் இருவரும் காசியில் விளாம்பழத்தை விட்டாச்சு. ! "உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்" ன்னு இவர் சொன்னதும், உருகித்தான் போய் விட்டேன்.
"காசி சபதமா, கணவன் சந்தோஷமா? " ன்னு மனசில ஒரு பட்டி மன்றம் நடத்திட்டு, கண்ணுக்குத் தெரியாத "காசி சபதத்தை" கை விட்டு, "கண்ணுக்கு தெரிந்த" இவர் ஆசையை அனுபவிக்க, பழத்தை உடைத்து (அவைகளில் பாதிக்குப் பாதி காய்கள் என்பது வேறு விஷயம்) , வெல்லம் போட்டு, சாப்பிட்டேன். இவருக்கு ரொம்ப சந்தோஷம்.
காசி சமாசாரம் எல்லாம் மனதோடு புதைத்து விட்டேன்.
"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட " ன்னு , அன்னிலேர்ந்து பழம் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.


Friday, May 1, 2020

மாவடு.......





ஹும்ம்ம்...... வருடா வருடம், இத்தனை நாளைக்கு மாவடு போட்டிருப்பேன். இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.
"அந்த நாளில்....." என்று நான் தஞ்சாவூர் கதைகள் போடுவதை போல், இதுவும், இனி "அந்த நாளில்..." என்று ஆகிவிட்டது.
மைலாப்பூரில், வழக்கமாக நான் மாவடு வாங்குபவரின் போன் நம்பர் கூட இருக்கு. நான் போன் பண்ணினதும், " வாங்கம்மா, இன்னிக்குதான் நல்ல வடு வந்திருக்கிறது. கிலோ 250 ரூ. தான். உடனே வாங்க" என்று , என்று கேட்டாலும் அதே மாதிரி சொல்வாள். வார்த்தை மாறமாட்டாள். தினம் ஒரு பேச்சு கிடையாது. நானும் அதை நம்பி, உடனே ஓடி, சுமார் 6 கிலோ வாங்கி, கல் உப்பு வாங்கி, வரளி மஞ்சள், கடுகு வாங்கி, மெனக்கெட்டு போட்டு, என் பெண்ணிற்கும் பாதி குடுப்பேன்.
எனக்கு குழம்பு சாதத்திலிருந்து, தயிர் சாதம் வரை மாவடு தொட்டுக்க கொள்ள பிடிக்கும். இங்கே , சோளிங்க நல்லூர் வந்த பிறகு, அது பழங் கதை தான்.
வடு போட ஒரு பெரிய டப் வைத்திருந்தேன். அதில் போட்டு, வடு தண்ணீர் வீட்டுக் கொண்டு, கொஞ்சம் சுருங்கியதும், பெரிய கண்ணாடி பாட்டில்களில் மாற்றி விட்டு, ஒரு சிறிய ஜாடியில் தினப்படிக்கு கொஞ்சம் போட்டு டேபிளில் வைத்து விடுவேன்.
எல்லா பாத்திரங்களையும் , சாமான்களையும் விஸ்ராந்திக்கு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஹும்ம்ம்...... இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.