Monday, September 10, 2018

திருவாதிரை களி...

திருவாதிரை களி..
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, அதனுடன் 1 பிடி பயத்தம் பருப்பு சேர்த்து ,கடாயில் போட்டு, பொரிய வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மெஷினில் குடுத்து சன்னமான ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கெட்டியான பாத்திரத்தில், (குக்கரில் ,அல்லது வெண்கல பானையில்) ஒரு பங்கு ரவைக்கு 2 1/2 பங்கு என்ற விகிதத்தில் (நல்ல அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தாங்கும்) தண்ணீர் வைத்து, ஒரு பங்குக்கு 2 1/2 பங்கு விகிதத்தில் வெல்லத்தை உடைத்து போட வேண்டும்.(நான் 3 பங்கு வைப்பேன்.. இப்போதெல்லாம் வெல்லத்தில் தித்திப்பு குறைச்சலாக இருக்கிறது)
நீர் கொதித்து வரும்போது, ஒரு மூடி தேங்காய் துருவலையும் சேர்த்து, தள தள வென்று கொதிக்கும்போது, அடுப்பை சின்னதாக வைத்து, அரிசி நொய்யை சீராக கொட்டிக்கொண்டே கிளற வேண்டும்.
அப்பப்ப அடி பிடிக்காமல் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
களி வெந்ததும் அதி ஏலக்காய் பொடி, வருத்த முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளற வேண்டும்.
அப்படியே மூடி வைத்தால், கொஞ்ச நேரத்தில் களி பொல பொல வென்று உதிர்ந்து கொள்ளும்.
(இரண்டு டம்ளர் அரிசி உடைத்தது, 3 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் வெல்லம், ஒரு மூடி தேங்காய் போட்டால், 4 பேருக்கு களி தாராளமாய் இருக்கும்)
வெண்கல பானையில் செய்யும் போது, மேலே தட்டை போட்டு மூடி, அந்த தட்டின் மேல் கொஞ்சம் தண்ணீர் விட்டால், உள்ளே தண்ணீர் சோர்ந்து, களி நன்றாக வேகும்
7 கறி கூட்டு பண்ணி, களியுடன் சேர்த்து சாப்பிட்டால், ஆஹா - என்ன ருசி.

No comments:

Post a Comment