Saturday, October 12, 2019

ரேடியோ .....

அப்பாவுக்கு பாட்டு என்றால் பயித்தியம். ஆனால் கர்நாடக சங்கீதம் தான். நாங்கள் அடுத்த ஜெனெரேஷன் என்பதால் அப்பாக்கு தெரியாமல் சினிமா பாட்டு சேர்த்துக் கொண்டோம்.
அப்பா ஒரு GEC ரேடியோ வைத்திருந்தார். தஞ்சாவூரில் , திருச்சி மட்டும் நன்றாக எடுக்கும். மெட்றாஸ் சுமார்தான்.
அது ஒரு வால்வு ரேடியோ. ரேடியோவை போட்டால் கொஞ்சம் நேரம் கழித்துதான் ஆரம்பிக்கும்.
அப்பா கச்சேரியை போட்டுவிட்டு , ராகம் சொல்லும்போது சத்தத்தை குறைத்துவிட்டு, எங்களை கேட்பார். சரியாக சொல்லாவிட்டால் கோபம் வரும்.
இரண்டாவது உலகப் போர் டைமில் ரேடியோவை உள்ளே ஒளித்து வைத்து அப்பா நியூஸ் கேட்பார்.
டிசம்பர் மியூசிக் சீசனில் மெட்றாஸ் மியூசிக் அகாடெமி, தமிழிசை சங்கம், இன்னும் "நகரத்தில் நடக்கும் கச்சேரியிலிருந்து" ஒலிபரப்பப் பட்ட கச்சேரிகளை கேட்டு அனுபவிப்பது உண்டு.
அப்பா வீட்டில் இல்லாதபோது ரேடியோ சிலோன் தான். அப்போது ஆல் இண்டியா ரேடியோவில் விவித பாரதி , வேறு சினிமா பாட்டுக்கள் கிடையாது.
ரேடியோ சிலோன் அருமையாக இருக்கும். மயில் வாகனன் என்றொரு அறிவிப்பாளர். ரொம்ப பிரபலம்.
வித விதமான நிகழ்ச்சிகள். அதில் "ஜோடி மாற்றம்" என்றொரு நிகழ்ச்சி நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லா சினிமா பாட்டு புஸ்தகங்களும் வாங்கி விடுவோம். புஸ்தகம் இல்லாத பாட்டுகளை ரேடியோவில் வரும்போது எழுதிக் கொள்வோம்.

"பினாகா கீத் மாலா" என்றொரு சூப்பர் ப்ரோக்ராம் கேட்டுருக்கிறீர்களா?
பாட்டை தவிர திருச்சி வானொலியில் ஒலி பரப்பாகும் நாடகங்கள் சுவாரசியமானவை. பாப்பா மலரும் பிடிக்கும் . நாடகங்களை எல்லோரும் ரேடியோவை சுற்றி உட்கார்ந்து கேட்போம். ஒலிச்சித்திரம் என்று சினிமாவை ஒலிபரப்புவார்கள்.
அந்த ரேடியோ ரொம்ப நாள் உயிரோடு இருந்தது.
மெட்றாஸில் நான் வேலைக்கு போனபோது அப்பாக்கு ஒரு ஃ பிலிப்ஸ் ரேடியோ வாங்கி கொடுத்தேன். 25 ரூ. தான். என்று நினைவு.
அதற்குள் பயம் தெளிந்து விட்டதால் நிறைய சினிமா பாட்டுக்களை கேட்பேன்.
காலை சீக்கிரம் எழுந்து நாலு மணியிலிருந்து ரேடியோ மலேசியா, ரேடியோ சிலோன் , ரேடியோ சிங்கப்பூர் என்று சினிமா பாட்டுக்கள். அந்த பாடல்களின் வரிகளும், டியூணும் இன்று வரை மறக்க மாட்டேன் என்கிறது.
1967 வரை (அது என்ன கணக்கு என்று கேட்கிறீர்களா- 1967 என் கல்யாணம்) டி.வி. யம் இல்லாததால் ஒரே பொழுது போக்கு ரேடியோ தான்.

No comments:

Post a Comment