Thursday, October 3, 2019

முடிவில்லா விசாரணைகள்...



எனக்கு 21 வயசாகி, படிப்பும் முடிந்ததும், எல்லா மாமிகளும் எங்கம்மாவை கேட்க ஆரம்பித்தது "ஏன் மாமி, பொண்ணுக்கு ஏதாவது வரன் தெகஞ்சிதோ? ன்னு.  ரொம்ப கவலையா கேட்டுட்டு, தனக்கு தெரிஞ்சவா பொண்ணுக்கெல்லாம் எப்படி "டக்கு டக்கு
 ன்னு வரன்  குதுந்துதுன்னுபாதி நிஜம் பாதி "ரீல்" விட, அம்மா, அதுக்கப்புறம் சில வருஷங்கள், வெளியில போறது, கல்யாணம் காட்சி அட்டென்ட்  பண்றதுஎல்லாம் நிறுத்திண்டுட்டா. . வழியிலயாரையாவதுபாத்தாலும், பாக்காதது போல் போய் விடுவாள்.

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள் அடுத்த கேள்வி. என்னன்னு உங்களுக்கெல்லாம் ஊகிக்க முடியும். இந்த கேள்விகளுக்கு பயந்துண்டு, ஒண்ணு என்ன, மூணு குழந்தைகள் பிறந்தாச்சு.

அதுக்கப்புறம் விட்டதா? அவா படிப்பு, உத்தியோகம், கல்யாணம், பேரன் பேத்திகள் எல்லா விசாரிப்பையும் தாண்டி, அறுபது வயசுக்கு மேல் அக்கடா என்று உக்காந்தால்....

ஒரு நாள், கொஞ்ச நாளாக பாக்காத மன்னியை ஆசையாக பாக்கப்போனால் " வசந்தா, உனக்கு முழங்கால் வலி வந்துடுத்தோ? மின்ன போல நடக்க முடியறதோ? ன்னு கேக்கறா. நானும் "ஆமாம் மன்னி, இப்பல்லாம் முடியவே இல்ல. கை காலெல்லாம் ஒரே வலி" ன்னு சொல்லி வைக்க, "அதான பாத்தேன். போக போக இன்னும் ஜாஸ்தியாகத்தான் ஆகும். இதுக்கு வைத்தியமும் கிடையாது" ன்னு நல்ல ஆசிகள் வழங்கி, குங்குமம் குடுத்து அனுப்பி வைத்தாள்.

என் அக்காவை பாத்த பொது, "மன்னி இப்படி கேக்கராடி" ன்னு சொன்னா, அவள்" அமாம் ஆமாம். அவள் கண்ணு பொல்லாதது. மாமியாரை விட்டு சுத்தி போடச்சொல்லு. ஆமாம், உனக்கு சுகர் வந்துடுத்தோ? " ங்கறா ! "இன்னும் இல்லியே" ன்னா, "எதுக்கும் அடிக்கடி செக் பண்ணிக்கோ. எப்ப வேணா வரும்" - இது அக்காவோட வார்னிங் !

ரோடில் யாரையாவது தெரிஞ்சவாளை பாக்க பயம்மா இருக்கு.
"பாத்து ரொம்ப நாளாச்சு வசந்தா. B.P. , Sugar  எல்லாம் வந்துடுத்தா ?" ன்னு ஏதோ பென்ஷன்  வரதாங்கர மாதிரி விசாரணை.
"சரி இவா எல்லாம் தன அனுபவத்துல சொல்றா" ன்னு போனா போறதுன்னு சகிச்சுண்டா -
ஏதோ ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் ன்னு டாக்டர் கிட்ட போனா, முதல் கேள்வி, "உங்களுக்கு சுகர் இருக்கா?" ங்கறதுதான். அதோடவா ! "எதுக்கும் Sugar, Cholestral, B.P., liver function, scan, echo, ECG எல்லாம் எடுத்துடலாம். பெட்டர் " ன்னு முழ நீள லிஸ்ட். பயம் வந்து, அவர் சொல்றா "கிளினிக்" போய் , எல்லா டெஸ்டும் எட்டாயிர ரூபா செலவழிச்சு பண்ணிண்டு, பயத்தோட ரிப்போர்ட் பாத்து,, எல்லாம் நார்மல் ஆக இருக்க, "இது வெறும் mild viral infection " ன்னு அந்த "mild " க்கு பேப்பர் நிறைய, வரிசையா, மருந்து பேர் !!
இது மட்டுமா ?

வயசாச்சு.
ரொம்ப நாழி கம்ப்யூட்டர் ல உக்காராதே.முதுகு வலி வரும்
ரொம்ப வாசிக்காதே. கண், தலை வலி வரும்
சாதம் சாப்பிடாதே. வயிறு உப்புசம் வந்து படுத்தும்
காலம்பர ராத்திரி காஞ்சி சாப்பிடு
வேணும்னா சப்பாத்தி ஒண்ணு ரெண்டு எடுத்துக்கோ.
கிழங்கு சாப்பிடாதே

தக்காளி சாபிடாதே. ஸ்டோன் வரும்னு ஒருத்தர். தக்காளி நிறைய சாப்பிடு. ஹார்ட்டுக்கு நல்லதுன்னு இன்னொருத்தர்.

வாழைபழம் சாப்பிடாதே. வெயிட் போடும்.... வாழப்பழம் தினமும் சாப்பிடு. constipation வராது...

இதல்லாம் ப்ரீ யா கிடைக்கிற அட்வைஸ்.. எல்லாம் உபமான, உபமேயங்களுடன் !!

இது மட்டுமா ?
ஆளுக்கொரு டாக்டர் suggest பண்ணி , ஒரு சாதாரண தலை வலி, brain tumor வரைக்கும் அலசப்படும்.

இதெல்லாமும் எப்படி?
"உனக்கு கோமளத்தை தெரியுமோ? அதாண்டி; நம்ம கமலாவோட நாத்தனார் பொண்ணு. அவளுக்கு இப்படித்தான் ... " என்று ஆரம்பித்து, ஒரு கதை.

"இப்படித்தான் அந்த ரங்கநாதனோட ஷட்டகர் பொண்ணு, (அந்த ரங்கநாதர் யாரென்று புரிஞ்சு கொள்ளவே தனி மூளையும் ஞாபக சக்தியும் வேணும் !!) , சின்ன வயசுக்காரி, கதவை தாப்பா போட்டுண்டு, குளிக்கப் போனவ, ரொம்ப நேரமாகி, கதவை உடைச்சுப் பாத்தா, மயக்கமா விழுந்திருக்கா ! மூலையில கட்டியம். கோமாவில இருக்கா. கைக்குழந்தை வேற" ன்னு, சொல்றா கதை, ஒரு மெகா சீரியல் எடுக்கலாம். மயக்கம் போட்ட பெண் கோமாவுக்கு போனது, ஆஸ்பத்திரிக்கு ஆனா செலவு, வீட்டில் வைத்து பார்ப்பது, nurse கிடைக்க படும் கஷ்டம், ஆத்துக்காரரின் அவஸ்தைகள், குழந்தை வளர்க்க யாரு ஹெல்ப்பு ...... !! நாம டாபிக் மாத்தினால ஒழிய இது நிக்காது !

இதை விட கொடுமை, ஒரு வருஷத்துக்கு அப்புறம் அதே மாமியை பாத்தால், விட்ட இடத்தில் இருந்து "போன வருஷம் சொன்னேனே, கோமால  இருக்கான்னு .. அவளுக்கு பெட் சோர் வந்து..." ன்னு ஆரம்பிச்சா, அடுத்த 500 எபிசொட் க்கு கதை ஓடும் !!

எல்லாம் சொல்லிட்டு, "ஹும்ம்... எல்லாம் பகவான் செயல். நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ. வயசாச்சு. குளிக்கும்போது கதவ தாள் போட்டுக்காதே. உங்காத்தில அந்த நாளத்திய கதவு. அப்புறம் உடைக்கணும்" ஞ்சு சொன்னா... அந்த மாமி கவலை படுவது என்னை பத்தியா, எங்காத்து கதவை பாத்தியான்னு தெரியல்ல. !!


ஸ்ரிங்கேரிக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு ரயிலில் வரேன் .. ஒருவர்
 " மாமி, இந்தாங்கோ. இந்த புரோஷரை வெச்சுக்கோங்கோ. அரித்ரடீஸ் பத்தி இன்னிக்கு ஒரு அமெரிக்க டாக்டர் கோடம்பாக்கத்தில ஆறு மணிக்கு பேசறார். இந்த textஐ படிச்சுட்டு அந்த lectureகேக்க வாங்கோ. ரொம்ப usefulஆக இருக்கும்" ங்கறார் !! சும்மாவா சொன்னார். முப்பது நிமிஷம் அதை பத்தி பேச, கட் பண்ணிண்டு இந்தண்ட வர பட்ட பாடு இருக்கே !!! 

பிரயாணம் முடிந்து, வீட்டுக்கு வந்து, குளிச்சு, சாப்பிட்டு, relaxed   ஆ , ஒரு magazine ஐ திறந்தா...
"உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகி விட்டதா. இதை படியுங்கள்.." ன்னு ஒரு கட்டுரை...
புக்கை படக்கென்று மூடி தூக்கிப் போட்டேன். 

ஒரு அட்டையில் "எனக்கு இது வரை B.P., Sugar, Cholestral, Thyroid, arithraities, heart blockஒண்ணும் வரல்லை. வந்தால் உடனே உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்" ன்னு எழுதி கழுத்தில் தொங்க விட்டுக்கலாம் ன்னு நினைக்கிறேன் !!     

 









No comments:

Post a Comment