Friday, May 24, 2019

கண்ணீர் பார்வையை மறைக்கின்றது.........

எனக்கு சுமார் பன்னிரண்டு வயதிருக்குமா ? இருக்கலாம்.
தேவதாஸ் படம் பார்த்தேன்..."எல்லாம் மாயை தானா ..." வில் ஆரம்பித்த அழுகை... "உறவுமில்லை, பகையுமில்லை..." இல் விசும்பி அழும் வரை போய், கடைசியில், சாவித்திரி ஓடி வர, கதவு சாத்தப்பட, இடித்துக் கொண்டு விழுந்து உயிர் விடும்போது...இனி அடக்கவே முடியாது என்ற நிலைமை. இத்தனைக்கும் ஒன்றும் அறியாத வயசு தான். ஒரு வாரம் அழுதிருப்பேன்.. நினைத்து நினைத்து... "
அடுத்த , மனதை பாதித்த படம் "எதிர் பாராதது" ... "அற்பச்செயளுக்கு இப்படியும் மன அவஸ்தை பட விடுவாயோ..." என்று இன்று பாடினாலும் கண்ணில் நீர்; மனதில் பாரம் அழுத்தும்.
பாச மலர் கேட்கவே வேண்டாம். இன்றும் " சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா.... " என்று பாடினால், அழுது கொண்டுதான் பாடுவேன்.
கல்யாணப்பரிசு ... நான் அப்போது தான் ஸ்கூல் முடித்திருந்தேன்.. சென்ட்ரல் ஸ்டேஷனில், சரோஜா தேவி, "காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி..." யில் ஆரம்பிக்கும் அழுகை, கடைசியில், ஜெமினி பாடிக்கொண்டே செல்லும் வரை தொடரும். இன்றும் அந்த படம் டி வி யில் வந்தால், என்னை யாரும் பார்க்க விட மாட்டார்கள். கதை நன்றாக தெரியும்; முடிவும் தெரியும்; அப்படியும் அழுவேன் !!
கர்ணன் படத்தில் - இரண்டு இடம்... குந்தி கர்ணனிடம், தான் தான் அவன் தாய் என்று சொல்லி இரண்டு வரம் கேட்கும் இடம் (சிவாஜியின் நடிப்பு.. அப்பப்பப்ப) ; கர்ணன் சாகும்போது... கிருஷ்ணர் வந்து அவன் செய்த புண்ணியங்களை தானமாக பெற்று, அவனை சொர்கத்துக்கு அனுப்புகையில்... கர்ணன் சினிமா பாட்டு கேட்டால் கூட உருகி அழுவேன்.
"கப்பலோட்டிய தமிழன்" ... இன்றும் பார்த்தால் உணர்ச்சி வசப்பட்டு நான் அழும் படம்... அதுவும் செக்கிழுக்கும் சீனில்...
ஹிந்தியில் "ஆ..." - டப் செய்யப்பட்டு தமிழில் அவன் ... "கல்யாண ஊர்வலம் வரும்; உல்லாசமே தரும்....." ; "அன்பே வா .. அழைக்கின்றதெந்தன் மூச்சே.. கண்ணீரில் துன்பம் போச்சே...." ராஜ் கபூரும் நர்கீசும்... மனதை பாரமாக்கிய படம்.
"ஆந்தி" சஞ்சீவ் குமார் , சுசித்ரா சென் .... சுசித்ரா அரசியலில் சேர, சஞ்சீவ் குமார் தனியாக ஆக, தேர்தல் சமயத்தில், இருவரும் மீட் பண்ண, நான் அரசியலை விட்டு விடுகிறேன் என்று சொல்பவள்.. ஜெயித்ததும்... மனம் மாறி ஹெலிகாப்டரில் ஏறி போக, நான் அப்பவும் அழுது முடித்திருக்க மாட்டேன். பாட்டெல்லாம் கேட்டுப்பாருங்கள்... உருக்கமோ...உருக்கம்.
அதே போல் ஆராதனா, மௌஸம் , இன்னும் நிறைய ஹிந்தி படம்.
நினைத்தாலே அழுகை வரும் படங்கள்.
"நான் காண்பேனோ சோ தரி யாளை .. பார் மீதிலே... காணாமலே ஏங்கி வீனாவேனோ..." - இரு சகோதரிகள். என் அக்கா (லண்டனில் இருக்கிறாள்) வை மிஸ் பண்ணி அழும் பாடல்.
இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.
ஆனால் நிறுத்தி விடுகிறேன். கண்ணீர் பார்வையை மறைக்கின்றது.

No comments:

Post a Comment